“அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு!” – உதயநிதி

”நான் அமீர்கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். ’லால் சிங் சத்தா’ படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு ” என இப்படத்தை தமிழகம் முழுதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அமீர்கான் தயாரிப்பில் ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் ‘லால் சிங் சத்தா’. அமீர்கான் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் வயாகம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இதில் அமீர்கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாக சைதன்யா, மோனாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சத்யஜித் பாண்டே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீதம் இசையமைத்திருக்கிறார். பாரஸ்ட் கெம்ப் எனும் ஆங்கில படத்தினைத் தழுவி அதுல் குல்கர்னி திரைக்கதை எழுத, அத்வைத் சந்தன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும், தமிழின் முன்னணி திரைப்பட வெளியிட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது. இதனைத் தொடர்ந்து  சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான அமீர்கான், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் அத்வைத் சந்தன், நடிகை மோனாசிங், படத்தினை தயாரித்திருக்கும் வயாகாம் 18 எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் ஆந்த்ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

5

இதில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வகுப்பை ‘கட்’டடித்துவிட்டு அமீர்கானின் ‘ரங்கீலா’ படத்தை பார்த்திருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அமீர் கானின் ரசிகன். இதன் காரணமாகவே அவரது நடிப்பில் வெளியாகும் ‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறோம் என எண்ண வேண்டாம். ’லால் சிங் சத்தா’ படைப்பு, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய நேர்த்தியான படைப்பு.

மாதந்தோறும் இரண்டு திரைப்படங்களையாவது ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதனை தவிர்ப்பதற்கு பலமுறை முயற்சித்தாலும், திரையுலக நண்பர்களுக்காக தரமான படங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்தத் தருணத்தில் அமீர்கான் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லால் சிங் சத்தா” படத்தினை தமிழில் வெளியிடுவதற்காக எங்களை தொடர்பு கொண்டார்கள். நாங்கள் அதை முதலில் வேண்டாம் என்று மறுக்க நினைத்தோம். தமிழ் திரைப்படங்களே போதும். இந்தி திரைப்படங்கள் வேண்டாம் என்றும் எண்ணினோம். திடீரென்று ஒரு நாள் அமீர் கான் வீடியோ காலில் தொடர்பு கொண்டு, ‘லால் சிங் சத்தா’ படத்தினை நீங்கள்  வெளியிட வேண்டும் என கோரிக்கை  வைத்தார். உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன். அதன் பிறகு படத்தை முழுவதும் பார்த்தோம். முன்னோட்டத்தில் பார்த்து ரசித்ததை விட, திரைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கிறது. அமீர்கான் அர்ப்பணிப்புடன் கூடிய ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார். பான் இந்தியா என்ற வார்த்தையை தற்போது தான் நாம் பெருமளவில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அமீர்கான் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இதனை  அறிமுகப்படுத்தி,  வெற்றி பெற்றிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களும் பெரிய அளவில் வரவேற்பார்கள்” என்றார்.