ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலீத், அனிர்பன் போலீசில் சரண்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர்களான உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் டெல்லி போலீசாரிடம் சரணடைந்தனர்.

ஜேஎன்யூ வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்த 5 மாணவர்களில், உமர் காலீத், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் புதன்கிழமை வரை கைது செய்ய தடை விதிக்குமாறும், சரணடையும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.டி.அகமது, ஆர்.கே.கவ்பா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மாணவர்கள் இருவரும் தாங்கள் விரும்பும் இடத்தில் புதன்கிழமைக்குள் சரணடைய வேண்டும் என்றும், அவர்களுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணியளவில் உமரும், அனிர்பன்னும் போலீஸில் சரணடைவதற்காக பல்கலைக்கழக வாகனத்தில் புறப்பட்டனர். அவர்களுக்காக வளாகத்துக்கு வெளியில் காத்திருந்த போலீஸார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்த இருவரைத் தவிர அசுதோஷ் குமார், அனந்த் பிரகாஷ், ராமா நாகா ஆகிய மூவரையும் இந்த வழக்கு தொடர்பாக தேடி வருவதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் இவர்களில் ஒருவரான அசுதோஷ் குமார், “நாங்கள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருக்கிறோம். அங்கிருந்து வேறு எங்கும் செல்வதாக இல்லை. விசாரணைக்கு தேவையென்றால் நாங்கள் ஒத்துழைப்போம். ஆனால், எங்களை யாரும் இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை” என கூறியுள்ளார்.