‘கேணி’ படத்தின் இயக்குனருக்கு கேரள அரசு விருது!

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி’

பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இப்படத்தில், “தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்?.. நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானது தானே?.. அதை எப்படி தனிமனிதன் சொந்தம் கொண்டாட முடியும்?” என ஏராளமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்.

ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே வெளியாகி இருந்த இந்தப் படத்தில், கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சனை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குனர்.

தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த போதிலும், தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இப்படத்தில் நிறைந்திருந்ததால் கேரளத்தில் சில இடங்களில் எதிர்ப்பு நிலவியது.

இப்படத்திற்கு, கேரள அரசு விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான நீதியை தனது திரைப்படத்தின் வாயிலாக பேசிய ஒரு இயக்குநருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.