“யோக்கியர்” அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவின் தொழில் நிறுவன மர்மங்கள்!

The Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை

———————————————————————————-

Thewire.in இணைய தளம் இன்று ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளியானவுடன், அதைப் படிக்கப் பலரும் முண்டியடித்ததில் தளமே சிறிது நேரத்திற்கு ட்ராஃபிக் தாங்காமல் முடங்கியது.

இந்தக் கட்டுரை, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா பற்றியது. அவருடைய நிறுவனத்தின் வரவு – செலவு எப்படி சில ஆயிரங்களில் இருந்து பல கோடிகளாக உயர்ந்தது என்பது பற்றியது.

ஜெய் அமித் ஷா (இனிமேல் ஜெய் என்று செல்லமாக அழைப்போம்) ‘டெம்பிள் என்டர்பிரைசஸ்’ என்று ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்த நிறுவனம் 2004ல் ஜெய், ஜிதேந்திர ஷா என்ற அவர்களுடைய குடும்ப நண்பர் ஆகியோரை இயக்குனர்களாக வைத்துத் துவங்கப்பட்டது. அமித் ஷாவின் மனைவி சோனல் ஷாவும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்.

2013ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் இழப்பு 6, 230 ரூபாய். 2014ஆம் ஆண்டில் இழப்பு 1,724 ரூபாய். 2014-15ல் கம்பெனியின் விற்பனை 50,000 ரூபாய். இதில் லாபமாக 18,728 ரூபாய் கிடைத்தது என கணக்குக் காட்டப்படுகிறது.

இதற்குப் பிறகுதான் கதையில் திருப்பம் ஏற்படுகிறது. 2015-16ல் நிறுவனத்தின் விற்றுமுதல் திடீரென 80.5 கோடி ரூபாயாக உயர்கிறது. இதில் 51 கோடி ரூபாய் வெளிநாட்டில் செய்யப்பட்ட வர்த்தகத்தின் மூலமாகக் கிடைத்ததாம். ஆனால், 2016ல் நிறுவனத்திற்கு 1.4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்குக் காட்டி நிறுவனமே மூடப்படுகிறது. அதாவது முதல் ஆண்டில் ஏகப்பட்ட வருவாய். அடுத்த ஆண்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கம்பனியே மூடப்படுகிறது.

கம்பனியின் வருவாய் திடீரென உயர்ந்த காலகட்டத்தில் ராஜேஷ் கண்ட்வாலா என்பவருக்குச் சொந்தமான ‘கேஐஎஃப்எஸ்’ என்ற நிறுவனம் ‘டெம்பிள் என்டர்பிரைச’சிற்கு 15.78 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்கில் இந்தக் கடன் தொகையே இல்லை. இத்தனைக்கும் அந்த ஆண்டில் ‘கேஐஎஃப்எஸி’ன் வருவாயே 7 கோடி ரூபாய்தான். 7 கோடி ரூபாய் வருவாய் உடைய நிறுவனம் 15 கோடி ரூபாயை இன்னொரு நிறுவனத்திற்குக் கடனாகக் கொடுக்கிறது.

இந்த ராஜேஷ் யாரென்று பார்த்தால், அவர் பரிமல் நாத்வானி என்பவரின் சம்பந்தி. இந்த பரிமல், ‘ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசி’ன் குஜராத் மாநில நிர்வாகத்தைக் கவனிப்பவர். 2014ல் ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் ஆதரவால் மாநிலங்களவை உறுப்பினரானவர்.

இப்போது இன்னொரு கம்பெனி கதைக்குள் வருகிறது. ஜூலை 2015ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயர் ‘குஸும் ஃபின்செர்வ்’. இதில் 60 சதவீத பங்குகளை வைத்திருப்பவர் நம்ம ஜெய். இந்த நிறுவனத்திற்கும் ‘கேஐஎஃப்எஸ்’ 2.6 கோடி ரூபாய் டெபாசிட் அளிக்கிறது. அதேபோல, இந்நிறுவனத்திற்கு 4.9 கோடி ரூபாய் யாரிடமிருந்தோ கடனாகக் கிடைக்கிறது. இந்த நிறுவனம், பங்கு வர்த்தகம், ஆலோசனை ஆகியவற்றில் ஈடுபட்டுவருவதாக கூறும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ரட்லாமில் 15 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு 2.1 மெகாவாட் மதிப்புள்ள காற்றாலையை இந்நிறுவனம் நிறுவுகிறது.

திடீரென கலுபூர் வர்த்தக கூட்டுறவு வங்கியிலிருந்து 25 கோடி ரூபாய் கடனாகக் கிடைக்கிறது. இந்தக் கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களாக இருப்பவர்கள் நிர்மா குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கடனுக்காக இரண்டு சொத்துகள் அடமானமாகக் காட்டப்படுகின்றன. ஒன்று அமித்ஷாவினுடையது. இன்னொன்று யஷ்பால் சுதாஷமா என்பவர் ‘குஸும்’ நிறுவனத்திற்கு அளித்த சொத்து. இந்த யஷ்பால்தான், அமித்ஷாவுக்கு ஆதரவாக ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் உண்மைகளை மறைத்ததாக சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்டவர்.

இந்த இரண்டு சொத்துகளை வைத்துதான் 25 கோடி ரூபாய் கடனை ஒரு கூட்டுறவு வங்கியிலிருந்து ‘குஸும் ஃபின்சர்வ்’ பெறுகிறது. ஆனால், இந்த இரண்டு சொத்துகளின் மதிப்பு 7 கோடி கூட தேறாது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய கடன்கள் தவிர, பொதுத் துறை நிறுவனமான Indian Renewable Energy Development Agency (IREDA)ம் ஜெய் ஷாவின் நிறுவனத்திற்கு 10.35 கோடி ரூபாய் கடனை அளித்திருக்கிறது. பியூஷ் கோயல் எரிசக்தித் துறை அமைச்சராக இருக்கும்போது இந்தக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனம் திடீரென காற்றாலையை நிறுவுகிறது. அதற்கு ஐஆர்இடிஏ கடன் தருகிறது.

ஒட்டுமொத்தமாக, அமித் ஷா மகனின் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் இருந்து கடன் என்ற வகையில் பல கோடி ரூபாயைப் பெற்றுள்ளன.

இந்தக் கட்டுரையை கம்பெனி பதிவாளர் வசம் உள்ள ஆவணங்களை ஆய்வுசெய்தே எழுதியுள்ளார் ரோகிணி சிங். இவர்தான் இதற்கு முன்பாக, ராபர்ட் வத்ராவுக்கும் ‘டிஎல்ஃஎபி’ற்கும் இடையிலான உறவு குறித்து வெளியிட்டவர்.

பா.ஜ.கவினர் இதற்கு விளக்கமளிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

MURALIDHARAN KASI VISWANATHAN

(Thanks – Muralidharan Kasi Viswanathan)