இது வைகோ சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டும் தானா…?

நடுநிலை காட்டுவதற்காக சாதிபிம்பங்களை இடத்திற்கொன்றாக ஆராதிக்கும் வைகோவின் செயல்கள் யாரும் அறியாததல்ல.

ஆனால், இப்பிரச்சினை வைகோ தேர்தல் போட்டியிலிருந்து விலகியது பற்றியதாகவும், திமுக மீதான அவரின் குற்றச்சாட்டு பற்றியதாகவும் மட்டுமே முடித்துக் கொள்ளப்படுகிறது.

உண்மையில் இது மட்டும் தான் பிரச்சினையா?

1) கோவில்பட்டி திமுக வேட்பாளர், தேவர் vs நாயக்கர் எதிர்மறை மூலம் தன் தேவர் சாதியின் எண்ணிக்கை பெரும்பான்மையை காட்டிப் பேசியது, கடந்த 3 நாட்களாக செய்தி பக்கங்களில் உலா வந்தது. இப்போக்கு தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டும் தானா? இன்றைக்கு தேர்தல் சார்ந்து, நிலவக்கூடிய சூத்திர எண்ணிக்கை பெரும்பான்மை அரசியலை வெளிப்படையாக அரசியல் நியாயம் போன்று பேசியபோது (அட சமூக நீதி) நாம் விரும்பும் அரசியல் கட்சியொன்றின் அரசியல் வெற்றிக்காக இதையெல்லாம் விவாதிக்க மறுக்கிறோமெனில் உண்மையில் நாம் யாராக இருக்கிறோம்?

2) உடுமலை சங்கரின் சாதி ஆவணப் படுகொலையைப் பற்றி முக்குலத்தோரை வெளிப்படையாக கண்டித்து வைகோ பேசினார். வைகோ எத்தனையோ முறை தேவர்சாதியை புகழ்ந்து பேசியிருக்கிறார். (நேற்றும் கூட.)  ஆனால் புகழந்தபோது ஏற்றுக்கொண்ட சாதிய மனம், விமர்சித்தபோது மட்டும் வன்மம் காட்டுகிறது என்றால் இத்தகைய சூழல் பற்றி விரிந்த அளவில் பார்க்க வேண்டாமா?

(இதற்கிடையில் முதுகுளத்தூர் பொதுத்தொகுதியில் தேவேந்திரர் ஒருவரை வைகோ வேட்பாளராக்கியுள்ளமைக்கும் இதில் பங்கு இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டியுள்ளது)

இதற்கிடையில், வைகோவின் இன்றைய நிலைப்பாட்டை விமர்சிக்கும் யாருடைய பேச்சிலும்,  இதில் பின்னணியாக இருந்த சாதியப் பேச்சுகளை சிறு குறிப்பாகக்கூட கணக்கெடுத்துக் கொள்ளாதது ஏன்? இங்கு பிரச்சினை வைகோ என்பதை விட அவர் சாதியாக்கத்தை குறிப்பாக சுட்டிப் பேசியதிலிருந்து எழுகிறது என்றால் நாம் இவற்றை மீண்டும் மீண்டும் வைகோ பிரச்சினையாக மட்டுமே காட்டுவது சரியா?

– ஸ்டாலின் ராஜாங்கம்

(ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில்  விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.)

Courtesy: the timestamil.com

(உடுமலையில் சாதி ஆணவக் கொலையாளிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுசல்யாவுக்கு நேரில் ஆறுதல் கூற வைகோ சென்றபோது எடுத்த படம் – மேலே)