விநியோகஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல் ராஜா தலைமையில் புதிய அணி!

வருகிற (டிசம்பர்) 24ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை -காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஞானவேல் ராஜா தலைமையில் புதிய அணி போட்டியிடுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஞானவேல் ராஜா, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது..

.நான் ஏன் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தேன் என்பது குறித்து விளக்கம் அளிக்கிறேன். நண்பர் அசோக்குமாரின் தற்கொலை பொதுமக்களையே புரட்டிப்போட்ட ஒரு விசயம். அவருடன் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நெருங்கி பழகியிருக்கிறோம். அவர் ஒரு மென்மையான மனிதர். அவர் இப்படியொரு முடிவு எடுப்பதற்கு ஏதோ ஒரு சில காரணங்கள், நிர்பந்தங்கள் நடைபெற்றிருக்கிறது. அதனை தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கான காரணம் என்னவாகயிருக்கும் என்று எண்ணியபோது, ஒரு சிலர் அதாவது மூன்று அல்லது நான்கு நபர்களின் கையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் மாட்டிக் கொண்டிருக்கிறது. யார் படமெடுக்க வேண்டும்? யாருக்கு விற்பனை செய்ய வேண்டும்? என்ன விலைக்கு விற்க வேண்டும்? என்பதை அந்த கும்பல் தீர்மானிக்கிறது. பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை, ஐந்து கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, அதன் மூலம் ஐந்து கோடி ரூபாயை நஷ்டப்படுத்தி, ஐந்து கோடி ரூபாயையும் அவர்களிடமே வரும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தெரிந்த வித்தைக்காரர்கள். முன்னணி நட்சத்திரம் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதுமுக நடிகர்களின் படமாக இருந்தாலும் சரி, அவர்கள் விரும்பினால், அதற்கு ஒரு பிரச்சினையை உருவாக்கி, புகார் தர வைத்து, அதற்கு பஞ்சாயத்து செய்து, தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் அசிங்கப்படுத்தி, அவர்களின் மனதைக் காயப்படுத்தி, புதிய விநியோகஸ்தர்களுக்கு என்ன நடக்கிறது என்பது புரிந்துகொள்வதற்குள், அவர்களின் படத்தால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து சிரமத்திற்கு ஆளாக்கி விடுகிறார்கள்.

இந்த சூழலில், நான் இதுவரை பதினெட்டு படங்களை தயாரித்திருக்கிறேன். பாகுபலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கும்கி போன்று இருபத்தெட்டு படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்திருக்கிறேன். இதனால் ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்படும்  சோதனையும், வேதனையும் தெரியும். ஒரு விநியோகஸ்தருக்கு ஏற்படும் சோகங்களும், இழப்புகளும், வலிகளும் தெரியும்.

விநியோகஸ்தர் சங்கம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு , அங்கு விநியோகஸ்தர்களின் பிரச்சினையைப் பற்றி பேசாமல், ஓரிருவர் பலன் பெற வேண்டும் என்பதற்காக அந்த சங்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நான் விரும்பும் ஃபெடரேசனிலும் இவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அங்கு செயல்படும் ஒரு சில புல்லுருவிகளின் சுயநலப்போக்கு தடுக்கப்பட்டு, சுதந்திரமாக வியாபாரம் செய்பவர்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதன் காரணத்திற்காகவும், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர்கள் நலத்திற்காகவும், அசோக்குமார் எடுத்தது போன்ற துயரமான முடிவை ஒருவர் மீண்டும் எடுக்காமல் இருப்பதற்காகவும் நான் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றால் வேறு எந்த அமைப்பிலும் எந்தவொரு பதவியிலும் இருக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், நான் தயாரிப்பாளர் சங்க பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறேன். இதை தவிர்த்து நான் பதவி விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன். நேற்று (04 12 2017) தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், அங்கு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு போட்டியிடுகிறேன். எங்களுடைய விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. டிசம்பர் 24ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது.

0a1e

இந்த அணியில் அனைவரும் புதுமுகங்கள். கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டு காலமாக இருந்த பழைய முகங்களுக்கு பதிலாக புது ரத்தம் பாய்ச்சுவது போல் புதிய அணியாக போட்டியிடுகிறோம். நடிகர் சங்க தேர்தலில் எப்படி புதிய அணி வென்று பதவிக்கு வந்ததோ, எப்படி தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய அணி வெற்றிப் பெற்று பதவியேற்றதோ, அதேபோல் விநியோகஸ்தர் சங்கத்திலும் மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பதற்காக புதிய அணியாக போட்டியிடுகிறோம்.

எங்களைத் தவிர்த்து மேலும் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. அவர்கள் இருவரும் அவர்களுக்குள்ளேயே பேசி வைத்து போட்டியிடுவது தான் வரலாறு. இந்த முறை புதியவர்களான எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். எங்களிடம் புதிய திட்டங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு கஷ்டப்படும் விநியோகஸ்தர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு படத்தின் தயாரிப்பாளருக்காவது அப்படத்தின் கதை தெரியும். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு அது கூட தெரியாமல், படக்குழுவினரை நம்பி முதலீடு செய்கிறார்கள். இதனால் அவர்களில் பெரும்பாலோர் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் இந்த விநியோகத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு என்னென்ன உதவிகள் செய்ய இயலும் என்பதை திட்டமிட்டிருக்கிறோம்.

இந்நிலையில் நாங்கள் கொடுக்கும் முதல் வாக்குறுதியே பஞ்சாயத்திற்கு வரும் எந்த படத்தையும் நாங்கள் அதாவது சங்க நிர்வாகிகள் விநியோகம் செய்யமாட்டோம். பஞ்சாயத்து தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட அந்த விநியோகஸ்தருக்கு நியாயம் கிடைப்பதற்கான பணியை மட்டுமே செய்யவிருக்கிறோம். இந்த வேலையை சரியாக உறுதியாக செய்துவிட்டாலே போதும் அனைத்து விநியோகஸ்தர்களும் நன்றாக இருப்பார்கள். அவர்களின் தொழிலும் லாபகரமாக இயங்கும்.

அடுத்து வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரச்சார கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. அதில் பல நல திட்டங்களைப் பற்றிய அறிவிப்பு இடம்பெறவிருக்கிறது.

எங்களுடைய அணியில் தலைவர் பதவிக்கு நானும், துணைத்தலைவர் பதவிக்கு கே ராஜனும், துணை செயலாளர் பதவிக்கு ஸ்ரீராமும், செயலாளர் பதவிக்கு நேசமணியும், பொருளாளர் பதவிக்கு ‘மெட்டி ஒலி’ சித்திக்கும் போட்டியிடவிருக்கிறார்கள். இதைத் தவிர வேறு பதவிகளுக்கும், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதையும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகிய மூவர் கூட்டணியை மாற்றியமைத்து திரைதுறையின் வளர்ச்சிக்கு பாடுபடவிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.