விமானநிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் விவசாயம்: கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

கேரள மாநிலம், ஆரன்முளா கிராமத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

விமான நிலையம் அமைக்கும் நிறுவனம், அதற்கான நிலத்தை வாங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் வழங்கப்பட்ட அந்த அனுமதிக்கு, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு 2012ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, 700 ஏக்கர் நிலப்பரப்பை விமான நிலையம் அமைப்பதற்காக கேஜிஎஸ் குழும நிறுவனம் கையகப்படுத்தியது. எனினும், அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கு உள்ளூர்வாசிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விமான நிலையம் அமைக்கும் பணியை மேற்கொள்வதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2014ஆம் ஆண்டு தடை விதித்தது.

இந்தச் சூழலில், கேஜிஎஸ் குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட 56 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ள முடிவு செய்துள்ள தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, அதற்கான பணியை சனிக்கிழமை தொடங்கியது. உள்ளூர்வாசிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பினராயி விஜயன் விதை தூவி விவசாயத்தைத் தொடங்கி வைத்தார்.