இயக்குனர்கள் சங்க தலைவர் தேர்தல்: ஆர்.கே.செல்வமணி வெற்றி

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வாகியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நேற்று கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுப்போடும் உறுப்பினர்களாக சுமார் 1900 பேர் உள்ளனர். நேற்றைய தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.

இன்னொரு தரப்பில், கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்த அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆ.கே.செல்வமணி 955 வாக்குகள் பெற்று மீண்டும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.