சந்தானத்தின் அதகள காமெடி திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’: செப்.1 முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில்!

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய  படம்  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த  ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’, ZEE5  ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய OTT தளமாக விளங்கும் ஜி5, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’க்கு தயாராகி வருகிறது. படம் முழுக்க பார்வையாளர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்து வயிறு வலிக்க சிரிக்க வைத்த சந்தானம் உள்ளிட்ட நடிகர் –நடிகைகள் நடித்து வெளிவந்த இப்படத்தை ,ஆர்.கே என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் வெளிவந்த சிறந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படங்களில் ஒன்றாகத் திகழும் ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’  செப்டம்பர் 1ஆம் தேதியன்று ZEE5 இல் பிரத்தியேகமாக வெளியிடப்படுகிறது.

பேய்கள் வசிக்கும் ஒரு பழைய அரண்மனை. அங்கு பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை எடுக்கப் போகும் நாயகன் சதீஷ், அவனது காதலி மற்றும் சதீஷின் நண்பர்கள் குழு வசமாக அந்த அரண்மனை பேய்களிடம் மாட்டி முழிக்கின்றனர். அந்த பேய்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வின் அல்லது ரன்’ என்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தில் நாயகனும் அவனது குழுவினரும் உள்ளனர். தங்கள் வாழ்நாளில் கொடிய விளையாட்டை வடிவமைத்த ரகசிய பேய்கள், முன்னேறத் தவறிய போட்டியாளர்களை கொடூரமாக கொல்ல தயாராகின்றன. பேய்களின் பித்தலாட்ட சதியை முறியடித்து சதீஷ் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெற்று பேய்களிடமிருந்து தப்பிக்கிறார்களா இல்லையா என்பதுதான் ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதை.

பயமும் காமெடியும் கலந்த இப்படம் பற்றி ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ZEE5 இல் பார்வையாளர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை உயர்த்தும் தனித்துவமான கதைகளை வழங்க விரும்புகிறோம். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஒரு தனித்துவமான திகில்-நகைச்சுவை ஆகும். இந்த அம்சங்களே பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கூட்டம் கூட்டமாக வரவழைத்து வெற்றியை தேடித்தந்தது. இந்த படத்தை எங்கள் தளத்தில் வெளியிடுவதை மகிழ்வாக நினைக்கிறோம். எங்கள் ஜி5யிலும் இது நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கிறோம்”என்றார்.

தயாரிப்பாளர் ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட் சி.ரமேஷ் குமார் கூறுகையில், “பொதுவாக ஹாரர் காமெடிகள் பயமுறுத்துவதாகக் கருதப்பட்டாலும், இயக்குனர் பிரேம், திரைக்கதைக்கு நியாயம் செய்து, அருமையான படத்தை எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்தப் படம் வெற்றிபெற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அபாரமாக உழைத்துள்ளனர். பாக்ஸ் ஆபிஸில் செய்ததைப் போலவே, டிஜிட்டல் பிரீமியர் காட்சிக்குப் பிறகு பார்வையாளர்கள் படத்திற்கு அபரிமிதமான ஆதரவை வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”என்றார்.

இயக்குனர் எஸ்.பிரேம் ஆனந்த், “ஹாரர் காமெடி ஜானரில் இப்படம் ஒரு முத்திரையை உருவாக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். திகில் மற்றும் காமிக்ஸ் கூறுகளுக்கு இடையே ஒரு சரியான சமநிலையை கற்பனை செய்ய எனது நேரத்தை எடுத்துக் கொண்டேன், இதனால் சதித்திட்டத்தின் மகிழ்ச்சி இறுதி வரை நீடிக்கும். பார்வையாளர்களுக்கு இது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நான் எதிர்பார்த்ததைபோல தியேட்டர்களில் ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்தது மகிழ்ச்சியடை செய்தது. ஜி5யிலும் ‘டிடி ரிட்டன்ஸ்’ அதிகப் பாராட்டுகளைப் பெறும் என்று நான் நம்புகிறேன்”என்றார்.

படத்தின் நாயகன் சந்தானம் கூறுகையில், “படத்தின் கதை மற்றும் அதன் களம் பற்றி முதன்முதலில் எனக்கு சொன்னபோது என்னை மிகவும் கவர்ந்தது. பிரேம் சாரின் கற்பனைக்கு என்னால் உயிர் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தைத் தயாரிப்பதில் நாங்கள் அனைவரும் நிறைய நேரத்தையும் கடின உழைப்பையும் கொடுத்தோம். இந்தப்படத்திற்கு திரையரங்குகளில் என்ன வரவேற்பு கிடைத்ததோ அது ZEE5 தளத்தில் கிடைக்கும்” என்றார்.