க்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல்!

இந்திய ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், “க்ளிக் ஆர்ட் மியூசியத்தை” சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில் முதலில் தொடங்கினார். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த க்ளிக் ஆர்ட் மியூசியம், சென்னையை தொடர்ந்து கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. அங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னை, கலிபோர்னியாவைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் க்ளிக் ஆர்ட் மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் பெங்களூரு நகரத்தின் வொய்ட்ஃபீல்ட், வெர்ஜினியா மால்ஸில் ஏ.பி.ஸ்ரீதரின் க்ளிக் ஆர்ட் மியூசியம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியத்தை பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். பெங்களூரு அணி வீரருமான கிறிஸ் கெய்ல் வண்ணம் தீட்டி துவக்கி வைத்தார். அது மட்டும் அல்லாமல், ‘க்ளிக் ஆர்ட்’ மியூசியத்தில் உள்ள ஓவியங்களுடன் மிகவும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

க்ளிக் ஆர்ட் மியூசியம் அனுபவம் பற்றி, கிறிஸ் கெயில் பேசுகையில், “ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறகுகள் ஓவியத்தின்முன் நின்று புகைப்படம் எடுத்தபோது, நான் ஒரு ஏஞ்சல் போலவே என்னை உணர்ந்தேன்” என்று சிலாகித்தார்.

“இங்கே இருக்கிற 27 ஓவியங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தேடுக்கப்பட்டு புதிதாக வரையப்பட்ட ஓவியங்களாகும். அதனால் உறுதியாக ரசிகர்களை மகிழ்விப்பதோடு, ஒரு புதிய அனுபவத்தையும் நிச்சயம் தரும்” என்றார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

0a