சென்னையில் ஒரு நாள் 2 – விமர்சனம்

சென்னையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமார், கோயம்புத்தூருக்கு பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். அங்கு, தன்னுடைய மாமாவின் பிள்ளைகளான ஒரு மகனையும், 2 பெண்களையும் வளர்த்து வருகிறார். இதில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் ஜூலியின் கொலை இன்றா? நாளையா? என்று போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. இதையறிந்த சிட்டி கமிஷனர் நெப்போலியன், இதை விசாரிக்க சொல்லி சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார். சரத்குமாரும் இந்த கேசை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. மேலும், சரத்குமாருக்கு தான் வளர்த்து வரும் மூன்று 3 பிள்ளைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் வருகிறது.

இறுதியில், இதன் பின்னணியில் இருப்பவர்களை சரத்குமார் கண்டுபிடித்தாரா? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார் சரத்குமார். தனக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்து அசத்திருக்கிறார். போலீஸ் வேடத்தில் நடிப்பது என்பது சரத்குமாருக்கு கைவந்த கலை. மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக நடித்திருக்கிறார், சரத்குமார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நெப்போலியனின் நடிப்பு சிறப்பு.

கன்னியாஸ்திரியாக நடித்திருக்கும் சுஹாசினி, தன்னுடைய அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார். சரத்குமாருக்கு டிரைவராக வரும் முனிஸ்காந்த் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

சென்னையில் ஒரு நாள் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘சென்னையில் ஒரு நாள் 2’ படம் வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதையை மிகவும் விறுவிறுப்புடன் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஜே.பி.ஆர்.. சுவாரஸ்யமான கதை என்றாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு சற்று குறைவாகவே உள்ளது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

அதிக காட்சிகள் இருட்டிலேயே படமாக்கி இருப்பதால் விஜய் தீபக்கின் ஒளிப்பதிவை அதிகமாக ரசிக்க முடியவில்லை. ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘சென்னையில் ஒருநாள் 2’ சுவாரஸ்யம் குறைவு.