“ஜிஎஸ்டி-யால் சினிமா வசூலில் பாதிப்பு இல்லை” என்கிறார் அபிராமி ராமநாதன்!

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சினிமா வசூலில் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழ்த் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் தொழில் வர்த்தக வளாகத்தில் ‘பிக் சினி எக்ஸ்போ’ என்ற திரையரங்குகளுக்கான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சர்வதேச அளவிலான திரைப்படத்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கண்காட்சியின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட அபிராமி ராமநாதன் பேசியதாவது:

ஜிஎஸ்டி கேளிக்கை வரி விதிப்பால் திரையரங்குத் தொழில் நலிவடைந்து விடும் என்ற அச்சம் இருந்தது. இப்போது அது இல்லை. திரையரங்குகளை நவீனப்படுத்தி நல்ல சினிமாக்கள், மக்கள் ரசிக்கக் கூடிய படங்களை திரையிட்டால் வசூல் குவியும், எந்த வரி விதிப்பும் தொழிலை பாதிக்காது என்பதை சமீபத்தில் வெளியான படங்களின் வசூல் உறுதிப்படுத்தியுள்ளது.

கேளிக்கை வரி சம்பந்தமாக மாநில அரசுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தை தொடர்பாக இன்னும் சில தினங்களில் நல்லதொரு அறிவிப்பை எதிர் பார்க்கலாம்.

நடிகர்கள், தயாரிப்பாளர்களைப் பற்றி மட்டுமே எல்லா தரப்பினரும் கவலைப்பட்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமா தயாரிப்பு துறைக்கு பிரதான வருவாய் ஈட்டித் தரக்கூடிய திரையரங்குகள் பற்றி கவலைப்பட்டு, அதற்காக சிறப்பு கண்காட்சி ஒன்றை சென்னையில் நடத்தியதற்கு ‘தியேட்டர் வேர்ல்டு’ நிறுவன உரிமையாளர் ராகவ்வுக்கு பாராட்டுகள்.

தமிழகத்தில் திரையரங்குகளை நவீனப்படுத்தி, சினிமா பார்க்க வரும் ரசிகனுக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முயற்சிப்பார்கள்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் பேசினார்.