பாபர் மசூதி இடத்தை ஆரியத்துவ வெறியர்களுக்கு விட்டுக் கொடுக்க ஷியா வாரியம் சம்மதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக போன்றவற்றை சேர்ந்த ஆரியத்துவ வெறியர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை கடந்த 30.9.2010-ல் தீர்ப்பளித்தது. மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2:1 என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லாலா ஆகிய மூன்று அமைப்புகளும் சரிபங்காக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஏழு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவரும்படி எழுந்த கோரிக்கையை அடுத்து, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த அமர்வின் விசாரணை வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவராக உள்ள உத்தர பிரதேச மாநில ஷியா மத்திய வக்பு வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை. இப்பிரச்சனையை சுமுகமாக முடிக்க நாங்கள் விரும்புகிறோம். அதன்படி, சர்ச்சைக்குரிய இடத்துக்கு வெளியே நியாயமான தொலைவில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியில் மசூதியை கட்டிக் கொள்ள சம்மதிக்கிறோம். மசூதியும் கோயிலும் ஒரே இடத்தில் இருந்தால் வழிபாட்டு ஒலிபெருக்கிகள் மூலம் ஏற்படும் சப்தம் இருதரப்பையும் கோபத்துக்கு ஆளாக்கி, பதற்றத்துக்கு வழி வகுக்கும். எனவே, நியாயமான தூரத்தில் அமைந்தால் இருதரப்பும் அமைதியுடனும், மத நல்லிணக்கத்துடனும் வாழ வழி ஏற்படும்.

பாபர் மசூதிக்கு உரிமை கொண்டாடி தொடரப்பட்ட வழக்கில் 30.3.1946-ம் ஆண்டு பைசாபாத் உரிமையியல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஷியா வக்பு வாரியத்துக்கே முழு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. ஷியா வக்பு வாரியத்தை உருவாக்கிய மீர் பாகி குறித்த ஆவணங்கள், கல்வெட்டு சான்றுகள் ஆகியவற்றை ஆராய்ந்த பின்பு நீதிபதி எஸ்.ஏ.அஹ்சன் இந்த தீர்ப்பை அளித்தார். இந்த தீர்ப்பின் அடிப்படையில் பாபர் மசூதி நிலத்துக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஷியா வக்பு வாரியத்துக்கு மட்டுமே உண்டு.

சுமுக தீர்வு குறித்து நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் ஷியா வக்பு வாரியம் மட்டுமே பங்கெடுக்க வேண்டும். அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க வேண்டும். இதில் அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் 2 பேர், உத்தர பிரதேச மாநில முதல்வர் அல்லது அவரது பிரதிநிதி, பிரதமர் அலுவலக பிரதிநிதி ஒருவர், ஷியா மத்திய வக்பு வாரிய உத்தர பிரதேச மாநில பிரதிநிதி ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு கூடிப் பேசி அனைத்து தரப்பும் ஏற்கக்கூடிய நிரந்தர தீர்வை பரிந்துரை செய்ய வேண்டும். இந்த கமிட்டி பரிந்துரை அளிக்க கால அவகாசத்தை நீதிமன்றம் நிர்ணயிக்க வேண்டும்.

கமிட்டியின் முதல் கூட்டம், இடம் ஆகியவற்றையும் உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும். இந்த தீர்வை அனைத்து தரப்பும் ஏற்று, சுமுக தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். ஷியா வக்பு வாரியம் எடுத்துள்ள இந்த முடிவை முன்கூட்டியே அறிந்துகொண்ட சன்னி மத்திய வக்பு வாரியத்தின் உத்தர பிரதேச மாநில பிரிவிடம் இருந்து எங்களுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது. அந்தப் பிரிவினர் தீவிர மதவாதிகளின் ஆதிக்கத்தால், இங்குள்ள இணக்கமான சூழ்நிலையை விரும்பாதவர்கள். இந்த வழக்கில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

எனவே, பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்வு காணவும் ஷியா வக்பு வாரியத்துக்கு மட்டுமே உரிமை உண்டு. எங்களுக்கு வந்துள்ள மிரட்டல் குறித்து உத்தர பிரதேச மாநில அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வரும் 11-ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் நடைபெறவுள்ள விசாரணையின்போது, முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.