சென்னை: ஒரே இடத்தில் 5 ஆயிரம் கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை!

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் ‘பரதம் 5000’ என்ற தலைப்பில் 5 ஆயிரம் பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.

பிரபல பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் கடந்த 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். விஜிபி குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் வினோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5 ஆயிரம் மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.

GUINNESS BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து, GUINNESS சான்றிதழ் வழங்கினார்கள்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கின்னஸ் பிரதிநிதிகள் சுவப்னில் மற்றும் திரு.விவேக், “இந்த பரதம் 5000 என்ற நிகழ்வு தான் உலகிலேயே மிகப் பெரிய நடன நிகழ்ச்சி. இந்த சாதனை GUINNESS BOOK OF RECORDS மற்றும் INDIA BOOK OF RECORDS ல் இடம் பெற்றுள்ளது” என்று கூறினர்.

லஷ்மன் ஸ்ருதி ராமன் – லஷ்மன் முன்னின்று நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசாகா மீடியா அன்பு மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒருங்கிணைத்து நடனமாடிய ஆடவல்லான் இசையாலயம் அதிஷ்டபாலனை அனைவரும் பாராட்டினர்.

5000 நடன கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்று போல் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் பாரம்பரியத்தை பறை சாற்றும் வண்ணம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பல சமூக மற்றும் கலை ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.