முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருதுகள் வழங்கியது டைரக்டர்ஸ் கிளப்

டைரக்டர்ஸ் கிளப் என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல்முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தியால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்,

உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் டைரக்டர்ஸ் கிளப் குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

டைரக்டர்ஸ் கிளப் நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் 17.12.2021 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, நடிகர் காளி வெங்கட் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, சி.எஸ்.ஐ. காது கேளாதோர் பள்ளி சார்பில் வாய் பேசமுடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் நடத்திய நாட்டிய நிகழ்வு அனைவர் மனதையும் கவர்ந்தது. இதனையடுத்து, 2020 மற்றும் 2021 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை டைரக்டர்ஸ் உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு, விழாவில் விருது வழங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்பட உதவி இயக்குநர் குழுவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே உதவி இயக்குநர்கள் அங்கீகரிக்கப்படுவதும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை.

இந்த ஆண்டின் நிறைவில் டைரக்டர்ஸ் கிளப் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வருகிறது.