அட்டு – விமர்சனம்

நாயகன் ரிஷி ரித்விக், யோகி பாபு உள்ளிட்ட 4 நண்பர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லாததால், நண்பர்கள் 4 பேரும் வடசென்னையில் உள்ள குப்பமேட்டிலேயே தங்களது வாழ்க்கையை கழிக்கின்றனர். அதேநேரத்தில், அந்த பகுதியின் கவுன்சிலர் இவர்களுக்கு ஒருசில வேலைகளை கொடுக்கிறார். அதேபோல் பிரச்சனைகளில் சிக்கும் இவர்களை காப்பாற்றவும் செய்கிறார்.

நாயகியான அர்ச்சனா ரவியை அவளது பள்ளிப்பருவத்தில் நடந்த பிரச்சினையில் இருந்து ரிஷி காப்பாற்றியதால், அர்ச்சனாவுக்கு அவர்மீது காதல் வருகிறது. முதலில் அவளது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் ரிஷி, பின்னர் தனது நண்பர்களின் வற்புறுத்தலால் சம்மதம் தெரிவிக்கிறான்.

இந்நிலையில், போதைபொருள் விற்பனை செய்யும் கும்பல் ஒன்று, போலீசிடம் இருந்து தப்பிக்க குப்பைமேட்டில் போதைபொருட்களை வீசிச் செல்கிறது. இந்த போதைபொருட்கள் நாயகனான ரிஷியிடம் சிக்குகிறது. அவனிடம் போதை பொருள் சிக்கிக் கொண்ட அறிவும் அந்த கும்பல், அதை மீட்க ரிஷியை கொலை செய்ய முயற்சி செய்கிறது. அந்த முயற்சி தோல்வியடைந்ததால், ரிஷிக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலருக்கு பணம் கொடுத்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இதிலிருந்து தப்பிக்கும் அட்டுவும் அவர்களது நண்பர்களும், கவுன்சிலர் செய்த துரோகத்திற்காக அவரை கொன்றுவிடுகிறார்கள்.

இதனால், போலீஸ் இவர்களை கைது செய்ய தேடிவருகிறது. இந்த கொலை பழியில் இருந்து தப்பிக்க வடசென்னையின் முக்கிய தாதாவிடம் ரிஷி மற்றும் அவரது நண்பர்கள் அடைக்கலமாகிறார்கள். அடைக்கலம் கொடுத்த அந்த தாதாவின் மகளை நண்பர்களில் ஒருவர் காதலித்து இழுத்து செல்கிறார். இதனால் கடும் கோபத்திற்குள்ளான தாதா அவர்களை என்ன செய்தார்? நண்பர்கள் 4 பேரும் என்ன ஆனார்கள்? ரிஷி, அர்ச்சனாவுடன் சேர்ந்தாரா? அர்ச்சனாவுக்கு என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தில் அட்டு என்ற கதாபாத்திரத்தில் வரும் ரிஷி ரித்விக் வடசென்னையை சேர்ந்த ஒரு இளைஞனாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பேச்சும், செய்கைகளும், நடையும், பாவனைகளும் அதற்கு சிறந்த உதாரணம். குறிப்பாக குப்பைமேட்டில் இருப்பது போல வரும் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் அந்த இடத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக தந்திருக்கிறார்.

நாயகியாக வரும் அர்ச்சனாவுக்கு இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும், தான் வரும் காட்சிகளில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக அட்டுவுடனான காதல் காட்சிகளில் இவரது நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

யோகிபாபு மற்றும் அவரது நண்பர்கள் அனைவருமே வடசென்னை வாலிபர்களாக கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக யோகிபாபு ஒரு ரவுடியாகவும், காமெடியனாகவும் சிரிக்க வைக்கிறார். அதுதவிர கவுன்சிலர் கதாபாத்திரம் மற்றும் தாதா கதாபாத்திரத்தின் மூலம் வடசென்னை தாதாக்களையும், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும் அறிய முடிகிறது.

வடசென்னையை மையமாக வைத்து படம் இயக்கிய இயக்குநர் ரத்தன் லிங்காவின் முயற்சியை முதலில் பாராட்டலாம். வடசென்னையில் நடக்கும் சம்பவங்களை அப்படியே திரையில் காட்டிய அவரது திரைக்கதை ரசிக்கும்படி உள்ளது. அதேபோல் நாயகர்கள் தேர்வும் அதற்கேற்றாற்போல் சிறப்பாக செய்திருக்கிறார்.

படம் முழுக்க வடசென்னையிலேயே எடுக்கப்பட்டிருப்பதால், மத்திய சென்னையை பார்த்த மற்ற ஊர் மக்கள், சென்னையின் மற்றொரு தோற்றத்தை இந்த படத்தின் மூலம் காண முடிகிறது. அதேபோல் படத்தின் வசனங்களும், சண்டைக்காட்சிகளும் பார்க்கும்படி இருக்கிறது. வடசென்னையில் நடக்கும் சண்டை, பஞ்சாயத்து, குற்றங்கள், குரோதம், விரோதம், வெறுப்பு உள்ளிட்டவற்றை இயக்குநர் தெளிவாக விவரித்திருக்கிறார்.

போபோ சசியின் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்ட, பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது. வடசென்னையை தனது கேமரா மூலம் சிறப்பாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராமலிங்கம்.

மொத்தத்தில் ‘அட்டு’ வடசென்னையின் பொட்டு.