”பாஜக வலுவடைந்தால் மக்களின் வாக்குரிமை பறிபோகும்”: அகிலேஷ் எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் மாவட்டத்தில் நட ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் உரை நிகழ்த்தினார். அப்போது அவர், ஒன்றிய அரசு அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ”உங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது, அரசியல்சாசனம் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்த மக்கள் (பாஜக) அதிகமாக வலுவடைந்தால் உங்கள் வாக்குரிமை பறிபோகும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அண்டை நாடான சீனாவில் தேர்தல் ஏதாவது நடக்கிறதா? அதற்கு அப்பால் போனால் ரஷியாவிலும் தேர்தல்கள் இலலை. பாகிஸ்தானில் ராணுவம் விரும்பும் அரசு அமைகிறது. மியான்மர் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தேர்தல்கள் இல்லை. எனவே எச்சரிக்கை தேவை’ என கூறினார்.

ஒன்றிய அரசின், வீடுகள்தோறும் தேசிய கொடி பிரசாரத்தையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் அகிலேஷ் யாதவ் குறை கூறினார். வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால், இன்று ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றக்கூறும் இவர்கள், ஒரு காலத்தில் மூவர்ண கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.