“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்ட்: சுராஜ் மன்னிப்பு கேட்க தமன்னா வலியுறுத்தல்!

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கத்தி சண்டை’. கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. மேலும், வசூலிலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

“இந்த படத்தில் தமன்னா படுகிளாமராக உடை அணிந்து வருகிறார்” என்ற தகவலை ஒரு சர்ச்சையாக கிளப்பிவிட்டு அதன்மூலம் ‘கத்தி சண்டை’ படத்துக்கு விளம்பரம் தேட விரும்பிய இயக்குனர் சுராஜ், இதற்காகவே கோடம்பாக்கம் பார்களில் சுற்றித் திரியும் ‘ட்விட்டர் குருவிகள்’ இருவரை அழைத்து, அவர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில், “நாயகி முழுமையாக உடையணிந்து நடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பணம் கொடுத்து திரையரங்கில் படம் பார்க்கும்போது, தமன்னாவை கிளாமராக பார்க்கத் தான் விரும்புவார்கள். நடிக்க வேண்டும் என்றால் அதுக்கு தனியாக தான் படம் பண்ண வேண்டும். கிளாமராக செய்பவர்கள் தான் இன்று பெரிய நாயகியாக இருக்கிறார்கள். ரசிகர்கள் படம் பார்க்கும்போது சந்தோஷமடைய வேண்டும். ஆடை வடிவமைப்பாளர், நாயகியின் முழங்கால் முட்டி வரை மூடும் உடை எடுத்து வருவார். ‘இதெல்லாம் கட் பண்ணுடா. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாங்க. நடிக்க சொல்லுடா’ என்று சொல்வேன்” என்று தெரிவித்தார் இயக்குநர் சுராஜ்.

அவர் ஆசைப்பட்ட மாதிரியே அவரது இந்த பேட்டி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் சுராஜ் கருத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் சுராஜ் கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்கும் நடிகை தமன்னா, “எனது இயக்குநர் சுராஜ் நடிகைகள் பற்றி தெரிவித்த கருத்துகள் எனக்கு கடும் கோபமூட்டுவதோடு காயப்படுத்துகிறது. அவர் இதற்காக என்னிடம் மட்டுமல்ல திரைத்துறையில் பணியாற்றும் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். நாங்கள் நடிகைகள், ரசிகர்களை உற்சாகப்படுத்தவே நடிக்கிறோம். ஆனால் அதற்காக எந்த ஒரு நிலையிலும் எங்களை காட்சிப் பொம்மைகளாக, காட்சிப் பொருட்களாக ஆக்கக் கூடாது. தென் திரையுலகில் நான் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். நான் எனக்கு சவுகரியம் தரும் உடைகளை அணிகிறேன்.

நம் நாட்டின் பெண்களைக் கேவலமாக பேசுவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. எனவே ஒரு தனிநபர் கூறிய இத்தகைய கருத்துகளை வைத்துக்கொண்டு திரைத்துறையே இப்படித்தான் என்று பொதுமைப்படுத்த வேண்டாம் என்று என் ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த “கவர்ச்சி உடை’ சர்ச்சை மூலமாவது ‘கத்தி சண்டை’ படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.