கோவை: கொலையுண்ட சசிகுமாரின் மனைவி தற்கொலை முயற்சி!

இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் ஜி.சசிகுமார் (வயது 36). கோவை ரத்தினபுரியை சேர்ந்த இவர், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல் என ரவுடி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர். கடந்த 22ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோவை ராம்நகரில் நடந்த இந்துத்வா நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இவர் கலந்துகொண்டுவிட்டு, வீட்டிற்கு கிளம்பியிருக்கிறார்.

அப்போது அவரை இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்த மர்மநபர்கள், அவர் வீட்டிற்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது இடைமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் உயிரிழந்தார்.

இது சாதி ஆணவக்கொலையாக இருக்கலாம், அல்லது கள்ளக்காதல் கொலையாக இருக்கலாம், அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பான முன்பகையால் நடந்த கொலையாக இருக்கலாம் என பலவித சந்தேகங்கள் எழுப்பப்படுவதால், சசிகுமார் கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசிகுமாரின் மனைவி யமுனா (வயது 30) இன்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். தக்க சமயத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது நலமுடன் இருக்கிறார்.

0a1

இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், “இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் கழிவறைக்குச் சென்ற யமுனா, வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனாலும் பதில் ஏதும் இல்லை. பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது யமுனா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது கையில் சாணி பவுடர் இருந்திருக்கிறது. இதனையடுத்து அவரை உறவினர்கள் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டர். ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு உறவினர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

சசிகுமாரை யமுனா காதல் திருமணம் புரிந்துள்ளார். தற்போது 3 மாத காலம் கர்ப்பிணியாக இருக்கிறார். காதல் கணவரை இழந்த நிலையில் விரக்தியில் இருந்துவந்த அவர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாக சசிகுமாரின் சகோதரி சூரியகுமாரி தெரிவித்துள்ளார்.

யமுனா அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.