ஒன்ஸ் மோர் – விமர்சனம்
நடிப்பு: அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர், சோனா ஒலிக்கல், டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வர்த், பிலிப்சன் தாமஸ், அருண்குமார் மணி, சௌந்தர்யா மனோகரன், கண்ணன் டி, ரிச்சி ரிச்சர்ட்சன், ரக்ஷா செரின், ஸ்ரீகாந்த், நியாஸ் முஹம்மது, சித்ரா லட்சுமணன், தேவதர்ஷினி சேத்தன், ஜென்சன் திவாகர், தயாளன், ரமா ராஜேந்திரா, மகேஸ்வர், லட்சுமி சரவணன், சுதர்சன் காந்தி, ஆரீஷ், குட்நைட் ஆர் நாகராஜன், ரித்திக் கிருஷ்ணா, பூஜா சுரேந்தர், நிர்மல்குமார், அபிரா பிரவீன், ஹரிகுமார், சோமசூர்யா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
படத்தொகுப்பு: நாஷ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
நடனம்: அப்சர்
கலை: ராஜ் கமல்
தயாரிப்பு: ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
சென்னை நெடுஞ்சாலையில் டூவீலரில் வந்துகொண்டிருக்கிறார் நாயகன் (அர்ஜுன் தாஸ்). அவர் முகத்தில் பல்லாண்டு கால சோகம் இறுக்கமாய் அப்பியிருக்கிறது. திடீரென்று அவரது டூவீலர் ரிப்பேராகி மக்கர் பண்ணுகிறது. அதை தள்ளிக்கொண்டு போய் மெக்கானிக் ஷெட்டில் விட்டால், “ரிப்பேர் பாத்து வைக்கிறேன். நாளைக்கு வந்து எடுத்துக்க சார்” என்கிறார் மெக்கானிக். வேறு வழியின்றி வாடகை வாகனம் புக் பண்ணிவிட்டு, அதன் வருகைக்காக வேளச்சேரி பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கிறார் நாயகன்.
அந்தப்பக்கம் தற்செயலாக காரில் வரும் நாயகி (அதிதி ஷங்கர்), நாயகனைப் பார்த்துவிடுகிறார். “ஹாய் ரகுவரன்” என்கிறார். திரும்பிப் பார்க்கும் நாயகன் ரகுவரனுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. “நான் அஞ்சலி. என்னைத் தெரியலையா? நான் உங்க காலேஜ் ஜுனியர். ஏழெட்டு வருஷத்துக்குப் பிறகு இப்பத் தான் உங்களைப் பார்க்கிறேன்” என்கிறார் நாயகி அஞ்சலி. இதன்பிறகும் அவரை இதற்குமுன் பார்த்த ஞாபகம் வரவில்லை ரகுவரனுக்கு. “வந்து கார்ல ஏறிக்கங்க. அக்கா வீட்டுல தானே தங்கியிருக்கீங்க. எடத்தைச் சொல்லுங்க. இறக்கிவிட்டுட்டுப் போறேன்” என்கிறார் அஞ்சலி. “இல்ல, வேண்டாம். ’கேப்’ புக் பண்ணியிருக்கேன்” என்கிறார் ரகுவரன். அப்போது அவரை செல்பேசியில் அழைக்கும் ’கேப்’ டிரைவர், “பேமண்ட் கேஷா, ஆன்லைனா?” என்று கேட்க, ரகுவரன் “ஆன்லைன்” என்று சொல்ல, “அப்ப ’கேப்’ வராது. கேன்சல் பண்ணிக்க சார்” என்று சொல்லிவிடுகிறார் டிரைவர்.
இதனால், அஞ்சலியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, வேண்டாவெறுப்பாக அவரது காரில் ஏறிக்கொள்கிறார் ரகுவரன். காரில் போகும்போது அவரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வருகிறார் அஞ்சலி. ரகுவரனுக்கோ அவருடன் பேசப் பிடிக்கவில்லை. கேட்ட கேள்விகளுக்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் அவர் பதில் சொல்லியபடி இருக்கிறார். அஞ்சலி திடீரென்று “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா, ரகு?” என்று கேட்க, ரகுவரன் அதிர்ச்சியடைகிறார். மறுக்கிறார். தொடர்ந்து அஞ்சலி வற்புறுத்தவே, எரிச்சலுடன் “அப்படியா? சரி, நாளைக்கு உங்க அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்கு வந்து கல்யாணம் பேசு” என்கிறார்.
மறுநாள். திருமணம் பேசுவதற்காக அப்பா (மகேஸ்வர்), அம்மா (லட்சுமி சரவணன்) சகிதம் நிஜமாகவே வந்து வாசலில் நிற்கிறார் அஞ்சலி. அவரது பெற்றோருக்கு ரகுவரனையும், ரகுவரனின் அக்கா சாரா (அனுஷா பிரபு) மற்றும் அக்காவின் கணவர் இப்ராஹிம் (டிராவிட் செல்வம்) ஆகியோருக்கு அஞ்சலியையும் பிடித்துப்போகிறது. ஆனால் ரகுவரனுக்கு அஞ்சலியைப் பிடிக்கவில்லை.
எனினும், அடுத்தடுத்த நாட்களில் ரகுவரனின் வீட்டுக்கு வந்தும், வெளியிலும் அவரை சந்தித்துப் பேசி கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரஸ் செய்ய முயலுகிறார் அஞ்சலி. ஒரு கட்டத்தில், சோக மனநிலையும், இறுக்கமும் மாறி, அஞ்சலியைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார் ரகுவரன்.

இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த விழாவில் மணமகளுடன் மேடையில் நின்று கொண்டிருக்கும் மணமகனான ரகுவரனுக்கு ஒரு போன் வருகிறது. “ரகுவரன், நான் இந்திரா பேசுறேன்” என்று சொன்னவுடன் ரகுவரனின் முகம் அதிர்ச்சியில் மாறிவிடுகிறது. ”நான் உன்கிட்ட தனியா பேசணும். அவசரம். நான் சொல்ற இடத்துக்கு உடனே வா” என்கிறது அந்த ‘இந்திரா”வின் குரல். இந்திரா வரச் சொன்ன இடத்திற்கு அவசரமாக கிளம்பிப் போகிறார் ரகுவரன்.
இந்திரா யார்? அவருடைய பின்னணி என்ன? அவருக்கும் ரகுவரனுக்கும் இருந்த கடந்தகால காதல் என்ன? அந்த காதல் பிரேக் அப் ஆனது ஏன்? இன்னொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடக்கும்போது அவரை இந்திரா அழைத்தது ஏன்? இந்திராவின் மறுபிரவேசத்தால் ரகுவரன் – அஞ்சலி திருமண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாதிப்புகள் என்ன? இறுதியில் ரகுவரன் யாரைக் கரம் பிடித்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் ரகுவரனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். இதுவரை பெரும்பாலும் அதிரடி வில்லனாக மிரட்டி வந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாக கலக்கியிருக்கிறார். கடந்தகால காதல் அனுபவங்களால் மனதில் உண்டான காயத்துடன் இறுக்கமாகவே முதலில் பயணிக்கும் கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி, பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பின் ஃபிளாஷ்பேக்கில் கல்லூரிக்கால துறுதுறு காதலனாக மற்றொரு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார்.
நாயகியாக, நாயகனின் கல்லூரி ஜுனியர் அஞ்சலியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். ஜெனிலியா நடித்த ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் நாயகி ஹாசினி கதாபாத்திரத்தைக் கொஞ்சம் நினைவூட்டக் கூடிய துடிப்பான கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

இரண்டாவது நாயகியாக, கதக் நடனக் கலைஞர் இந்திராவாக படத்தின் இரண்டாம் பாதியில் அழகு தேவதையாக வரும் சோனா ஒலிக்கல், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
உளவியல் நிபுணர் லாவண்யாவாக வரும் தேவதர்ஷினி சேத்தன், நாயகனின் அக்கா சாராவாக வரும் அனுஷா பிரபு, அவரது கணவர் இப்ராஹிமாக வரும் டிராவிட் செல்வம், தேவாலய பாதிரியார் எட்வினாக வரும் ஜென்சன் திவாகர், நாயகனின் அப்பாவாக வரும் தயாளன், அம்மாவாக வரும் ரமா ராஜேந்திரா, நாயகி அஞ்சலியின் அப்பாவாக வரும் மகேஸ்வர், அம்மாவாக வரும் லட்சுமி சரவணன், இரண்டாவது நாயகி இந்திராவின் அப்பாவாக வரும் நிர்மல் குமார், அம்மாவாக வரும் பூஜா சுரேந்தர், சிறுவயது இந்திராவாக வரும் அபிரா பிரவீன், தன்பால் புணர்ச்சியாளர் கீகீயாக வரும் ஜகபர், அவரது காதலனாக வரும் ஆரீஷ், பாடக லிங்கமாக வரும் சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான அளவான நடிப்பை அருமையாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விக்னேஷ் ஸ்ரீகாந்த். கதைக்கரு பழையது தான் என்றாலும், மனதில் நிற்கக் கூடிய புதிய காட்சிகளைக் கொண்டு, பார்வையாளர்களை ரொம்பவும் மூக்கைச் சிந்தவிடாமல், ஜாலியாகவே படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். எழுத்து, குறிப்பாக வசனங்கள் அருமை. தனது காதல் பிரேக்-அப்புக்கு இரண்டாவது நாயகி சொல்லும் காரணம் படு வீக்! இதற்காகவா இந்த நாயகன் ஏழெட்டு வருடங்கள் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு திரிந்தான் என்று எரிச்சலாகக் கேட்கத் தோன்றுகிறது. மேற்கண்ட குறையையும், இரண்டாம் பாதியின் ’வழவழா கொள கொளா’வையும் தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் – இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை. ‘வா கண்ணம்மா’, ‘இதயம்’, ‘மீண்டுமா’, ‘மிஸ் ஒருத்தி’, ‘இந்திரா’ என படத்தின் 13 பாடல்களும் ஹிட் ரகம். ஒரு காதல் படத்துக்குத் தேவையான அருமையான பின்னணி இசையையும் வழங்கியிருக்கிறார். வாழ்த்துகள் ஹேஷாம் அப்துல் வஹாப்!
ஒளிப்பதிவாளர் அரவிந்த் விஸ்வநாதன் தன் கேமரா மூலம் காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் அழகு சேர்த்திருக்கிறார்.
’ஒன்ஸ் மோர்’ – பார்த்து ரசிக்கத் தக்க காதல் படம்!
ரேட்டிங்: 3/5
