டாக்ஸிக் – விமர்சனம்

நடிப்பு: யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரோஷி, ருக்மணி வசந்த் மற்றும் பலர்

எழுத்து: யஷ் & கீது மோகன்தாஸ்

தமிழ் உரையாடல்கள்: கணேஷ் சுப்ரமணியன்

இயக்கம்: கீது மோகன்தாஸ்

ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி

படத்தொகுப்பு: உஜ்வல் குல்கர்னி

இசை: ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி

ஸ்டண்ட்: ஜே.ஜே.பெர்ரி, அன்பறிவ், கெச்சா காம்பக்டீ, அம்ரித் சிங்

தயாரிப்பு: கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்

மக்கள் தொடர்பு: யுவராஜ்

‘கேஜிஃஎப்’ என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்ற கன்னட நடிகர் யஷ், அடுத்து நடித்துள்ள பெரிய பட்ஜெட் திரைப்படம்… ’லையர்ஸ் டைஸ்’, ‘மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கி விருதுகளை வென்ற மலையாள நடிகை கீது மோகன்தாஸ் மூன்றாவதாக இயக்கியுள்ள திரைப்படம்… பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு, விஜய்யின் ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் ‘கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ்’ கே.வெங்கட் நாராயணா (அதாங்க, விஜய்யின் நல்லாசியால் ”தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி” பதவியைப் பெற்றிருப்பவர்) தயாரித்துள்ள திரைப்படம் என்றெல்லாம் தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன் அப்ஸ்’ திரைப்படம் பற்றி ஆசை வார்த்தை கூறுவார்கள்… ஏமாந்து விடாதீர்கள்!

‘டாக்ஸிக்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘ நச்சுத்தன்மை (அதாவது விஷத்தன்மை) வாய்ந்தது’ என்பது பொருள். இச்சொல் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கக் கூடியது என்பதால், கவர்ச்சிக்காக இதை இப்படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து பார்வையாளர்கள் இப்படத்துக்குப் போனால்… போனால்… போனால், இழுத்து வைத்து கழுத்தறுத்து, கொலையாய்க் கொன்று வெளியே தூக்கி வீசுகிறார்கள். அதன் பிறகு தான் தெரிகிறது, ‘டாக்ஸிக்’ என்பது இப்படத்துக்கான தலைப்பு அல்ல; இப்படம் குறித்து பார்வையாளர்களை உஷார்ப்படுத்தும் ’எச்சரிக்கை’ என்று.

”டாக்ஸிக்’ படத்தின் கதை என்ன?”

பிரஸ் ஷோ தொடங்குவதற்கு முன்பு அல்ல; பிரஸ் ஷோ முடிந்தபிறகு பெரும்பாலான பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் பரஸ்பரம் கேட்டுக்கொண்ட கேள்வி இது! அந்த அளவுக்கு குழப்பமான கதை, தெளிவில்லாத திரைக்கதை! ’விமர்சனம் எழுதும்போது தேவைப்படுமே’ என்று தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் புள்ளிகளை இணைத்து, நானும் ’கதைச்சுருக்கம்’ என்ற வஸ்துவை உருட்டித் திரட்டி வைத்திருக்கிறேன். அது என்னவென்றால்…

1947ஆம் ஆண்டு இந்தியாவின் ஏனைய பகுதிகள் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றபோதிலும், கோவா மட்டும் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அங்கு கங்கா (நயன்தாரா), அவரது தம்பி ராயா (யஷ்) ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் அநாதையாக வளர்ந்து வருகிறார்கள். தம்பி “பசிக்குது அக்கா” என்றால், அதைத் தாங்கிக்கொள்ள முடியாத கங்கா, சீவி முடித்து, பொட்டு வைத்து, பாலியல் தொழிலுக்காக தெருவில் போய் நின்றுவிடுவார். அந்த அளவுக்கு தம்பி மேல் பாசம் கொண்டவர் கங்கா.

கோவாவில் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் மன்னாதி மன்னனாகத் திகழும் சல்வடோர் என்ற தாதாவின் கும்பலின் முக்கிய நபராக உருவெடுக்கிறார் ராயா. கடத்தல் தொழிலில் தன் தம்பி ராயா மிகப்பெரிய தாதா ஆகி, கோவாவையே ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் அக்கா கங்கா. அதற்காக அவரும் ராயாவும் கடினமாக உழைக்கிறார்கள்.

இந்நிலையில், ராயாவுக்கும் தாதா சல்வடோர் மகள் ரெபேக்காவுக்கும் (தாரா சுதாரியா) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில், சர்க்கஸ் அமைக்க கோவாவுக்கு வரும் நாடியா (கியாரா அத்வானி), ராயாவின் வாழ்க்கையில் நுழைகிறார். அவர் மீது காதல் கொண்டு, தன் மகள் ரெபேக்காவை விட்டுவிட்டு, நாடியாவுடன் ராயா சுற்றுவதை தாதா சல்வடோரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ரெபெக்காவும் ராயாவை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இதனால், ராயாவை பழி வாங்குவதற்காக அவருக்கு மிகவும் பிரியமான அவரது அக்கா கங்காவை நாடியா படுகொலை செய்கிறார்.

அக்கா கங்காவை படுகொலை செய்த காரணத்தால் நாடியாவையும், அவர் மூலம் பிறந்த தன் குழந்தையையும் சந்திக்கவே விரும்பாமல் ஒதுக்கி வைக்கிறார் ராயா. இந்த சோகத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்கிறார் நாடியா. சில வருடங்களுக்குப் பிறகு மகன் வளர்ந்து, தன் அம்மாவின் மரணத்திற்கு அப்பா ராயாவைப் பழி தீர்க்கக் கிளம்புகிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது? அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் என்ன? மகன் அப்பா ராயாவைக் கொன்றாரா? அல்லது அப்பா ராயா மகனைக் கொன்றாரா? அல்லது இருவரும் தப்பி ஒன்று சேர்ந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு குழப்பியடித்து, பார்வையாளர்களின் தலைகளை கிறுகிறுக்கச் செய்து, ஒருவழியாய் முடிவுக்கு வருகிறது, மூணே கால் மணி நேர ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இதுதான் தோராயமான கதைச்சுருக்கம். இதையும் தாண்டி படத்தில் கதை, திரைக்கதை என்ற பெயரில் என்னென்னவோ செய்திருக்கிறார்கள். அவை பற்றி யாமறியோம் பராபரமே!

நாயகனா, வில்லனா என்ற தெளிவில்லாத ராயா, டிக்கெட் என்ற இரு வேடங்களில் யஷ் நடித்திருக்கிறார். அவர் குடிக்கிறார்; புகைக்கிறார்; புணருகிறார்; யாரையாவது கொல்கிறார். மீண்டும் குடிக்கிறார்; புகைக்கிறார்; புணருகிறார்; யாரையாவது கொல்கிறார். இப்படியே படம் முழுக்கச் செய்து, ‘கேஜிஃஎப்’ படத்தில் கிடைத்த நல்ல பேரையும் புகழையும் நாசமாக்கியிருக்கிறார் யஷ்.

ராயாவின் அக்கா கங்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். தம்பி புகைத்துக்கொண்டிருக்கும் சிகரெட்டை வாங்கிப் புகைக்கிறார். மது அருந்துகிறார். தம்பி புணருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தன் பங்குக்கு பலரை கொலை செய்கிறார். பின்னர் அவரும் கொலை செய்யப்படுகிறார். இதற்குமேல் நயன்தாராவின் நடிப்பைப் பீற்ற ஒன்றும் இல்லை.

நாடியாவாக கியாரா அத்வானி, ரெபேக்காவாக தாரா சுதாரியா, எலிசபெத்தாக ஹுமா குரோஷி, மெல்லிசாவாக ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களது கதாபாத்திரங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன. இவர்களில் பலரை ஆபாச ‘பிட்டு’பட நடிகைகள் ரேஞ்சுக்கு தரம் தாழ்த்தி, ”ஒரு பெண் இயக்குநர் படத்திலா இப்படி?” என்று பார்வையாளர்களை செருப்பைக் கழற்ற வைத்திருக்கிறார் பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ்!

மனம் போன போக்கில் கதை, திரைக்கதை எழுதி, ஏனோதானோ என்று ஒரு படமாக எடுத்து ‘டாக்ஸிக்’ என்று கொடுத்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ். இப்படியொரு படம் எடுப்பதற்கு பதிலாக அவர்……..? என் வாயில நல்லா வருது!

பின்னணி இசை தன் பங்குக்கு மோசம்; ஒரே இரைச்சல். தமிழ் உரையாடல்கள் அசிங்கம்; அபத்தம்!

ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள், மேக்கப் கலைஞர்கள் உள்ளிட்ட பல நூறு தொழில்நுட்பக் கலைஞர்களை ஒட்டுமொத்தமாக வீணடித்திருக்கிறது இந்த படம்.

‘டாக்ஸிக்’ – படம் பார்த்த எல்லோரும் “போகாதீங்க…” என்று கதறுகிறார்களே, அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமும், தெம்பும், திராணியும் இருப்பவர்கள் மட்டும் ஒருமுறை பார்க்கலாம்!

ரேட்டிங்: 0.01/5