ஆட்டி – விமர்சனம்

நடிப்பு: இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சௌந்தர், செல்வகுமார், பிரவீன் பழனிச்சாமி, கரன் சக்ரவர்த்தி, ஆலன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சௌந்தர்ராஜன், நேசன், குயிலி நாச்சியார், உதயசுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா மற்றும் பலர்

இயக்கம்: கிட்டு

திரைக்கதை: திருமுருகன்

ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்

படத்தொகுப்பு: சி.எம்.இளங்கோவன்

இசை: தீசன்

கலை: முஜிபுர் ரஹ்மான்

ஸ்டண்ட்: சுரேஷ்

தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

‘ஆட்டி’ என்ற சொல்லுக்கு ‘தலைவி’, ‘முதன்மையானவள்’ என்பது பொருளாம். பெண்ணை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருப்பதால் இப்படத்துக்கு பொருத்தமாக ‘ஆட்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

இப்படக்கதை 1970களில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அநீதிகளைப் பொறுத்துக்கொள்ள இயலாத போலீஸ் இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ் (இசக்கி கார்வண்ணன்) ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். குற்றவாளிகளை உடனுக்குடன் தண்டிப்பதற்காக அவர் நடத்திய பல என்கவுண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டவை. என்றபோதிலும், சில என்கவுண்ட்டர்கள் போலியானவை; சட்டத்துக்குப் புறம்பானவை. இத்தகைய போலி என்கவுண்ட்டருக்கு தண்டனையாக அவர் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுவார். அப்படித் தான் இப்போது மதுரை மாவட்டத்திலுள்ள கோடை மலை கிராமத்துக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத கோடை மலை கிராமத்தில், பழங்குடி மக்கள் தங்கள் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள என்.ஜி.ஓ பள்ளியில் பணிபுரிவதற்காக மதுரையிலிருந்து செல்வம் (பிரவீன் பழனிச்சாமி) என்ற என்.ஜி.ஓ ஆசிரியர் வருகிறார். அவர் பணியில் சேர்ந்த ஓரிரு நாட்களில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கிறார்.

இக்கொலை குறித்து புலன்விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ், பல இடங்களில் தீவிரமாக முயன்றும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் மதுரைக்குச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்ளும்போது, ஆசிரியர் செல்வம் கொலைக்கும், 150 ஆண்டுகளுக்கு முன் நடந்த சில சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ்.

150 ஆண்டுகளுக்குமுன் நடந்த அந்த சம்பவங்கள் தான் என்ன? அவற்றைத் தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் அமைதி ராஜ், கொலையாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா? அவர்கள் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ஆட்டி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் – என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் – அமைதி ராஜாக இப்படத்தின் தயாரிப்பாளர் கார்வண்ணன் நடித்திருக்கிறார். தனது வேடத்துக்குரிய கம்பீரம் மற்றும் விறைப்பை அவர் காட்டுவதும், எதற்கெடுத்தாலும் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதும் ரசிப்புக்குரியவை.

மலை கிராமத்துப் பழங்குடி இளம்பெண் அழகுவாக அபி நட்சத்திரா நடித்திருக்கிறார். அவரது தோற்றம் ஒருவகை இனம் புரியாத அச்சத்தைக் கொடுக்கிறது. சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் காட்சியிலும், ஆசிரியர் செல்வத்திடம் சீறும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு.

கான்ஸ்டபிள் விடியலாக வரும் காதல் சுகுமார், மற்றொரு கான்ஸ்டபிள் குப்புசாமியாக வரும் செல்வகுமார், என்.ஜி.ஓ ஆசிரியர் செல்வமாக வரும் பிரவீன் பழனிச்சாமி, போஸ்ட்மேன் இசக்கியாக வரும் சௌந்தர், சங்கிலியாக வரும் கரன் சக்ரவர்த்தி, வணங்காமுடியாக வரும் ஆலன் கிருஷ்ணா, காளியாக வரும் சித்து குமரேசன், கடம்பனாக வரும் ஆனந்த் சௌந்தர்ராஜன், கொலைக் கும்பலைச் சேர்ந்தவர்களாக வரும் குயிலி நாச்சியார், உதயசுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா, கொலைக் கும்பலின் இன்ஃபார்மராக வரும் நேசன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

திருமுருகன் திரைக்கதையில், கிட்டு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம், தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களின் உயரிய நிலை,சிறுதெய்வ வழிபாடுகள் ஆகியவற்றைக் கலந்து தமிழினப் பெருமையைப் பேச முயன்றிருக்கிறது. மேலுடை அணியாத ஆண்கள், ரவிக்கை அணியாத பெண்கள் என்ற அந்தக்கால மனிதர்களைக் கண்முன் நிறுத்தி, வழக்கமான படம்போல் இல்லாமல் வேறுபட்டு நிற்கிறது.அதோடு பழந்தமிழ்ச் சமூகத்தின் கதைகள் வசனங்களாக வந்து வியப்பூட்டுகிறது.

தீசனின் பின்னணி இசை, சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, சி.எம்.இளங்கோவனின் படத்தொகுப்பு, முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், சுரேஷின் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இந்த 92 நிமிட படத்துக்கு பலம்!

‘ஆட்டி’ – பழங்கால ‘சிங்கப்பெண்’கள் பற்றிய திரைப்படம்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5