காளிதாஸ் 2 – விமர்சனம்

நடிப்பு: பரத், அஜய் கார்த்தி, ’பூவே உனக்காக’ சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணதி, அனந்த் நாக், பிரகாஷ் ராஜ், கிஷோர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஸ்ரீ செந்தில்

திரைக்கதை: அரவிந்தன் ஆனந்த்

ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா

எடிட்டிங்: புவன் ஸ்ரீனிவாசன்

இசை – சாம் சி.எஸ்

பாடல் வரிகள்: மோகன்ராஜ்

நடன அமைப்பு: பாபி

ஆடை வடிவமைப்பு: டோரதி ஜெய் (டிஜே)

சண்டை அமைப்பு: ஓம் பிரகாஷ்

கலை: கலியுக ஏ.ராஜா

தயாரிப்பு: ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்)

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ போல, சுஜாதாவின் ‘கணேஷ் – வசந்த்’ போல மிகவும் சிக்கலான வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்து தீர்ப்பதில் வல்லவர் என பெயர் பெற்ற கதாபாத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ். இந்த காளிதாஸ் கதாபாத்திரத்தில் பரத் நடிக்க, 2019ஆம் ஆண்டு வெளிவந்த ‘காளிதாஸ்’ திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்ற ஊக்கத்தில், தற்போது அதே பரத் நாயகனாக நடிக்க, ‘காளிதாஸ் 2’ என்ற புலனாய்வுத் திரில்லர் திரைப்படம் தயாராகி வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

சென்னை புறநகரில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கோகுல் (அனந்த் நாக்) – சஞ்சு (அபர்ணதி) இளம் தம்பதி, மித்ரா என்ற தங்களுடைய நான்கு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்கள். அக்குடியிருப்பில் நடைபெற்ற புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டத்தின்போது, பெண் குழந்தை மித்ரா திடீரென காணாமல் போகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் இவ்வழக்கு விசாரணையை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, விரிவான விசாரணையைத் தொடங்குகிறார்.

இந்த விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக போலீஸ் அசிஸ்டண்ட் கமிஷனர் வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) வருகிறார். ஆரம்பத்தில் அசிஸ்டண்ட் கமிஷனர் வைஷ்ணவிக்கும், இன்ஸ்பெக்டர் காளிதாஸுக்கும் இடையே தொழில்முறை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. இவற்றை கடந்து விசாரணை முன்னேறுகையில், காணாமல் போன குழந்தையின் அம்மா சஞ்சு, அப்பா கோகுல், குடியிருப்போர் சங்கச் செயலாளர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் எனப் பலரும் விசாரணையின் ஒரு பகுதியாக கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

அந்த சமயத்தில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஸ்டீபன் (அஜய் கார்த்தி) என்ற ஜூனியர் வழக்கறிஞர் மீது சந்தேகம் ஏற்படவே, அவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறார். அவரை விசாரித்துக் கொண்டிருக்கும்போது, காணாமல் போன குழந்தையின் சடலம் கிடைக்கிறது. இதனால் ஸ்டீபன் கைது செய்யப்படுகிறார். ஆனால், ஸ்டீபனின் சீனியர் வழக்கறிஞர் நடராஜ் (பிரகாஷ் ராஜ்) வந்து, ஸ்டீபனுக்கு எதிராக ஆணித்தரமான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதை எடுத்துக் காட்டி, ஸ்டீபனை விடுவித்து அழைத்துச் சென்றுவிடுகிறார்.

உண்மைக் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தீவிரமாக இருக்க, மறுபுறம், ஸ்டீபன் தான் உண்மைக் குற்றவாளி என்று நிரூபிக்க அசிஸ்டெண்ட் கமிஷனர் வைஷ்ணவி முயன்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அதே அடுக்குமாடி குடியிருப்பில், மற்றொரு சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்து, சடலமாக மீட்கப்படுகிறது. இதனால் அங்கு குடியிருப்போர் அனைவரும் அச்சத்திலும், பீதியிலும் அதிர்ந்துபோகிறார்கள்.

இச்சிறுமிகளின் மரணங்களுக்கு காரணம் யார்? இக்குற்றச் செயல்களுக்குப் பின்னுள்ள நோக்கம் என்ன? உண்மைக் குற்றவாளியை இன்ஸ்பெக்டர் காளிதாஸ் நெருங்கினாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிதாஸாக பரத் நடித்திருக்கிறார். காக்கி உடையில் கம்பீரமான தோற்றம், நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நடை என அசல் போலீஸ் இன்ஸ்பெக்டரை பார்வையாளர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். எடுத்துக்கொண்ட சவாலான பணியிலிருந்து கவனம் சிதறாமல், கருமமே கண்ணாக செயல்பட்டு, தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார்.

போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் வைஷ்ணவியாக பவானி ஸ்ரீ நடித்திருக்கிறார். சின்னஞ்சிறு குருவி தலையில் இத்தனை பெரிய பனங்காயா? என்ற எண்ணம் முதலில் எழுந்தாலும், காட்சிகள் நகருகையில் இவருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடிப்பில் நடக்கும் போட்டா போட்டி, பார்வையாளர்களை படத்தோடு கட்டிப்போட்டு ரசிக்க வைக்கிறது.

போலீஸின் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வரப்படும் ஜூனியர் வழக்கறிஞர் ஸ்டீபனாக அஜய் கார்த்தி நடித்திருக்கிறார். புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓ.கே பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் நுணுக்கமாக நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டால், எதிர்காலத்தில் முன்னணி ஹீரோ மெட்டீரியல் ஆகலாம்.

சீனியர் வழக்கறிஞர் நடராஜாக வரும் பிரகாஷ் ராஜ், இளம் தம்பதி கோகுல் – சஞ்சுவாக வரும் அனந்த் நாக் – அபர்ணதி, ரூப சுந்தரியாக வரும் ‘பூவே உனக்காக’ சங்கீதா, பாண்டியாவாக வரும் கிஷோர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இதை உணர்வுபூர்வமாகவும், நிறைய திருப்பங்களுடனும் எழுதியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் ஸ்ரீ செந்தில். இந்த வெற்றி ‘காளிதாஸ் 3’ படம் உருவாக வழியமைத்துக் கொடுக்கும் என்று நம்பலாம்.

சுரேஷ் பாலாவின் ஈர்ப்புக்குரிய ஒளிப்பதிவு, சாம் சிஎஸ்ஸின் பொருள் பொதிந்த பின்னணி இசை, புவன் சீனிவாசனின் சீரான படத்தொகுப்பு உள்ளிட்ட நேர்த்தியான தொழில்நுட்பங்கள் இப்படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

‘காளிதாஸ் 2’ – பரபரப்பான ‘கிரைம் புலனாய்வு திரில்லர்’ விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!

ரேட்டிங்: 4/5.