”வரும் சட்டப்பேரவை தேர்தலில் ’மக்கள் நீதி மய்யம்’ போட்டியிடாது”: கமல்ஹாசன் அறிவிப்பு!

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரை ஏற்புடையதாக இல்லாததால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மநீம, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தொகுதி பங்கீட்டு குழுவிடம் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் மநீம கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் நேற்று இரவு 8 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற கட்சியின் முடிவை ஸ்டாலினிடம் கமல்ஹாசன் தெரிவித்தார். பின்னர், கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நமக்கு தருவதாக சொல்லியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட லேண்டும் என்ற பரிந்துரையும் கட்சி உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை. டார்ச் லைட் சின்னத்துடனான கட்சி தொண்டர்களின் பிணைப்பு உணர்வுபூர்வமானது. இந்த சின்னம் வெறும் சின்னம் அல்ல. அது எங்களின் அடையாளம். ஆகவே, இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. திமுக கூட்டணிக்கு நிபந்தனை இன்றி ஆதரவு அளிப்போம்” என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறுகையில், “தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளோம். திமுக ஆட்சி தொடர வேண்டும். திமுகவுடன் நிற்பதை கடமையாக கருதுகிறேன். இது தியாகம் இல்லை, கடமை. திமுகவுக்கு முழுமையான அழுத்தமான ஆதரவு அளிப்போம்” என்றார்.

ஸ்டாலின் நெகிழ்ச்சி:

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தேர்தலில் போட்டியிடாமல் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது தியாகம் அல்ல, கடமை என்று கமல் கூறினார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம் தான். கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவரது முடிவு என்னை நெகிழ வைத்துவிட்டது. தமிழகம் முழுவதும் கமல் வலம் வரவேண்டும். அமையும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினால் ஆனது” என்று தெரிவித்துள்ளார்.