எல்எஸ்எஸ் (லவ் ஷேர் சப்ஸ்கிரைப்) – விமர்சனம்

நடிப்பு: ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன் அத்வானி, படவா கோபி, வினோதினி வைத்தியநாதன், ஜாவா சுந்தரேசன் (எ) சாம்ஸ், ரோஹித், தனஞ்ஜெயன், முத்து புவன் மற்றும் பலர்

இயக்கம்: ஆர்.மகாலட்சுமி முருகன்

கதை, வசனம்: அசோக் அமிர்தராஜ்

ஒளிப்பதிவு: என்.எஸ்.சதீஷ் குமார்

படத்தொகுப்பு: ஸ்ரீகாந்த் என்பி

இசை: அஸ்வமித்ரா

பாடல் வரிகள்: சினேகன், அருண் பாரதி, மணி அமுதவாணன், இயக்குநர் சரண்

நடன அமைப்பு: தீனா, கிருஷ்ணா

கலை இயக்கம்: ரஜினி சேகர்

சண்டை அமைப்பு: தளபதி தினேஷ்

தயாரிப்பு: பி.ரகு

வழங்கல்: ’ஜேபி பிலிம்ஸ்’ ஜோன்ஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா

பெரும்பாலான யூ-ட்யூப் சேனல்கள் “லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க” என்று வேண்டுகோள் விடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் “லைக் பண்ணுங்க” என்பதை “லவ் பண்ணுங்க” என்று மாற்றி, பின்னர் மொத்தத்தையும் “லவ், ஷேர், சப்ஸ்க்ரைப்” என்று சுருக்கி, அதை இன்னும் எளிதாகக் குறிப்பிட வசதியாக அவற்றின் ஆங்கில முதல் எழுத்துக்களை மட்டும் பெயர்த்தெடுத்து தொகுத்து “எல்எஸ்எஸ்” என்று வைத்தால்…! இப்படித் தான் இப்படத்தின் தலைப்பு ’எல்எஸ்எஸ் (லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்)’ என்று ஆகியுள்ளது. எனினும், இப்படக்கதைக்கும், யூ-ட்யூப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இப்படக்கதை முதலில் சென்னையிலும், பின்னர் காசியிலும் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சிவா (ஆதவ் கிருஷ்ணா) என்ற இளைஞன் தன் மகள் பூஜாவை (சிம்ரன் அத்வானி) கடத்திச் சென்றுவிட்டதாக பூஜாவின் அப்பா மணிப்பால், சென்னை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். முன் பின் தெரியாத சிவாவுக்கு இரக்கப்பட்டு, பெரம்பூர் ரயில் நிலையம் செல்ல லிஃப்ட் கொடுத்த ஒரே பாவத்துக்காக டூவீலர் ஆசாமி ஒருவரை (ஜாவா சுந்தரேசன் (எ) சாம்ஸ்) போலீசார் அள்ளிக்கொண்டு வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து, “சொல்லு, பெண்ணை அந்த சிவா எங்கே கடத்திட்டுப் போயிருக்கான்? அவன் ரயில்வே ஸ்டேஷன் போறதுக்கு நீ தானே உதவி செஞ்சிருக்க? உனக்குத் தெரியும். சொல்லு” என்று மிரட்டுகிறார்கள். எதுவும் புரியாமல் டூவீலர் ஆசாமி விழிக்க, அப்போது போலீஸ் நிலையத்துக்குள் வரும் சிவாவின் அப்பா (படவா கோபி), “யாரும் யாரையும் கடத்தல. ரெண்டு பேரும் விரும்பித் தான் போயிருக்காங்க” என்று சொல்லி திடுக்கிட வைக்கிறார்.

நடந்தது என்னவென்றால், (பிளாஷ் பேக்)…

நாயகன் சிவா புத்திசாலியான கல்லூரி மாணவர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரது அப்பா (படவா கோபி), அம்மா (வினோதினி வைத்தியநாதன்) ஆகிய இருவருமே பரந்த மனப்பான்மை கொண்ட முற்போக்காளர்கள். அதனால் சிவாவும் இயற்கையாகவே இரக்க மனப்பான்மையும், நல்ல பண்புகளும் கொண்டவராகத் திகழ்கிறார்.

அதே கல்லூரியில் நாயகி பூஜாவும் படிக்கிறார். அவரது அப்பா மணிப்பால் பெரிய பணக்காரர். பூஜா சிறுவயதாக இருக்கும்போதே அவருடைய அம்மா விவாகரத்து பெற்று, வேறொருவரை மணந்து, காசிக்குச் சென்று விட்டார். அதனால், தாயின் அரவணைப்பை அறியாத பூஜாவை அவரது அப்பாவும் பாட்டியும் வளர்த்து ஆளாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், சிவாவின் நற்பண்புகளால் ஈர்க்கப்படும் பூஜா, அவர் மீது காதல் கொள்கிறார். அவரது காதலை சிவா முதலில் ஏற்க மறுத்தாலும், பின்னர் ஏற்றுக்கொள்கிறார். பூஜாவை சிவா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தனது பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க, அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தன் மகளின் காதலை பூஜாவின் அப்பா மணிப்பால் ஏற்றுக்கொள்வதாக இல்லை. அதனால் காசிக்குச் சென்று தன் அம்மாவின் ஆசியையும் சம்மதத்தையும் பெற ஆசைப்படும் பூஜா, தனக்குத் துணையாக வருமாறு சிவாவை அழைக்கிறார். சிவா தன் பெற்றோருக்குத் தெரிந்தும், பூஜா தன் அப்பாவுக்குத் தெரியாமலும் கிளம்பி காசிக்குச் செல்கிறார்கள். (பிளாஷ் பேக் முடிய…)

காசியில், ”சிவா இல்லாமல் நீ மட்டும் தனியாக கங்கைக் கரைக்கு வா” என்று பூஜாவின் அம்மா சொல்லுகிறார். அதன்படி, சிவாவை லாட்ஜிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, பூஜா மட்டும் புறப்பட்டுப் போகிறார். அம்மாவும் மகளும் தனியே சந்திக்கிறார்கள். அம்மாவின் ஆசியையும், அறிவுரையையும் பெற்றுக்கொண்டு பூஜா திரும்பி வருகையில், எதிர்பாராத விதமாக பயங்கரமான விபத்து ஒன்றில் சிக்கி மூளைச் சாவு அடைகிறார். அவர் யாரென்றே தெரியாத வழிப்போக்கர்கள், அவரை தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

பூஜா திரும்பி வராததால் பதறும் சிவா, அவரை காசி முழுக்கத் தேடி அலைகிறார். கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே, பூஜாவை கடத்திச் சென்றுவிட்டதாக அவரது அப்பா கொடுத்த புகாரின் பேரில், காசி போலீசார் சிவாவைப் பிடித்துச் சென்று, போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து, விசாரணை என்ற பெயரில் அடித்து சித்திரவதை செய்கிறார்கள்.

பூஜாவின் அப்பா மணிப்பாலும், மாமா சுனிலும் ஆவேசத்துடன் காசிக்கு விரைகிறார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது? மூளைச்சாவு அடைந்த பூஜா, அதிலிருந்து மீண்டாரா? காவல் நிலையத்தில் வதைபட்ட சிவா என்ன ஆனார்? அவரும் பூஜாவும் மீண்டும் இணைந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு உள்ளத்தைத் தொடும் வகையில் உணர்ச்சிப்பூர்வமாக விடை அளிக்கிறது ‘எல்எஸ்எஸ் (லவ் ஷேர் சப்ஸ்க்ரைப்)’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் சிவாவாக – நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த புத்திசாலி கல்லூரி மாணவராக – ஆதவ் கிருஷ்ணா நடித்திருக்கிறார். காதல் சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற முகம் மற்றும் உடல்வாகு. காதல், காமெடி, செண்டிமெண்ட், சேசிங், பிரிவுத்துயர் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்று பாராட்டுகளைப் பெறுகிறார்.

நாயகி பூஜாவாக, பெரிய பணக்கார வர்க்கத்துக் கல்லூரி மாணவியாக சிம்ரன் அத்வானி நடிக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இயல்பு மாறாமல், அதே நேரத்தில் துடிப்புடன் நடித்து கவனம் ஈர்க்கிறார். காதலன் மீது அளப்பரிய அன்பு, பணக்கார அப்பாவின் மேட்டுக்குடித்தனத்தின் மீது வெறுப்பு, பிரிந்து சென்றுவிட்ட அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் என பலவகை உணர்வுகள் கலந்த தன் கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கி, அதற்கு பொருத்தமான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் அப்பாவாக வரும் படவா கோபியும், அம்மாவாக வரும் வினோதினி வைத்தியநாதனும் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி, கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்கள்.

நாயகியின் அப்பா மணிப்பாலாக வரும் நடிகர், தோற்றத்தில் அஜித்குமார் சாயலில் இருப்பதோடு, திறமையாக நடித்து ‘இந்த நடிகரின் பெயர் என்ன?’ என்று ஆவலோடு கேட்க வைத்திருக்கிறார்.

நாயகனுக்கு லிஃப்ட் கொடுத்து மாட்டிக்கொள்ளும் டூவீலர் ஆசாமியாக வரும் ஜாவா சுந்தரேசன் தன்னால் இயன்ற அளவு காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையையும், வசனத்தையும் எழுதியிருக்கிறார் அசோக் அமிர்தராஜ். படத்தின் முதல் பாதியை சென்னைக் கல்லூரி காதலாகவும், இரண்டாம் பாதியை காசியில் தொலைந்துபோன நாயகியை தேடும் படலமாகவும் பிரித்துக்கொண்டு, இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடிக்கும் விதமாக கதை, வசனத்தை அமைத்திருக்கிறார். அதற்குள் தாய் – மகள் பாசம், குடும்ப உறவுகளின் மேன்மை ஆகிய அம்சங்களையும் புகுத்தியிருப்பது சிறப்பு.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் திறம்பட வேலை வாங்கி, நேரம் போவதே தெரியாத அளவுக்கு படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும், கமர்ஷியலாகவும், அதே நேரத்தில் துளி ஆபாசம் இல்லாமலும் நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர்.

அஸ்வமித்ராவின் இசையமைப்பு, என்.எஸ்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு, தளபதி தினேஷின் சண்டை அமைப்பு, தீனா, கிருஷ்ணா ஆகியோரின் நடன அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்துக்கும் நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘எல்எஸ்எஸ் (லவ், ஷேர், சப்ஸ்க்ரைப்)’ – உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நாகரிகமான காதல் படம்!

ரேட்டிங்: 3.25/5