”கூட்டணி குறித்து காங். தலைமை எடுப்பதே இறுதி முடிவு”: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கே.சி.வேணுகோபால்!

ஆட்சியில் பங்கு குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத்துகளே தவிர, அதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் சென்னை முகப்பேரில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.சி.வேணுகோபால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விவசாயிகளுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.

இந்தியா அமெரிக்கா இடையே போடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவும். இதனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஏற்கெனவே ஜவுளித் தொழில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவையே அமெரிக்காவிடம் மத்திய அரசு சரணடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் இந்தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

ஆனால் இந்திய அரசோ மவுனம் காத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பேச முடியாத சூழல் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் உரை அவை குறிப்பில் நீக்கப்படுகின்றன.

திமுக- காங்கிரஸ் இடையேயான உறவு என்பது மிக நீண்ட கால மற்றும் கொள்கைரீதியான கூட்டணி. பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வருகிறோம்.

அந்த ஒற்றுமை இப்போதும் தொடர்கிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், எங்களுக்கும் எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கும் தெளிவான இலக்குகள் உள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

கூட்டணி ஆட்சி குறித்து கட்சியில் இருக்கும் தனிநபர்கள் யாராவது கருத்துச் சொன்னால், அது அவர்களின் சொந்தக் கருத் துகளே தவிர, அதற்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கூட்டணி மற்றும் அதன் முடிவுகள் குறித்து அகில இந்தியத் தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும். இவ்வாறு கூறினார்.

முன்னதாக நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், ‘கூட்டணிக் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.