தக் லைஃப் – விமர்சனம்

நடிப்பு: கமல்ஹாசன், சிலம்பரசன் டிஆர், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், அலி ஃபாசல், பகவதி பெருமாள், வையாபுரி, வடிவுக்கரசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சின்னி ஜெயந்த், சேத்தன் மற்றும் பலர்
இயக்கம்: மணிரத்னம்
ஒளிப்பதிவு: ரவி கே சந்திரன்
படத்தொகுப்பு: ஸ்ரீகர் பிரசாத்
இசை: ஏஆர் ரகுமான்
தயாரிப்பு: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ்
பத்திரிகை தொடர்பு: டைமண்ட் பாபு & சதீஷ் S2 மீடியா
’தக் லைஃப்’ என்ற ஆங்கிலத் தலைப்பை ‘தாதாவின் வாழ்க்கை’ என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். இப்படம் எதைப் பற்றியது என்பதை இந்த தலைப்பே சொல்லிவிடுகிறது. கதையின் நாயகன் ஒரு தாதா; அவனது வாழ்க்கையைச் சொல்லும் படம் இது.
தாதாவின் வாழ்க்கையைச் சொல்வதென்றால் கமல்ஹாசனுக்கும், மணிரத்னத்துக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த ஜானரில் இருவரும் தனித்தனியே பல திரைப்படங்கள் கொடுத்துள்ள போதிலும், இருவரும் இணைந்து 1987-ல் ‘நாயகன்’ என்ற மகத்தான வெற்றிப்படத்தை – தமிழ்த் திரைத்துறையையே புரட்டிப்போட்டு வியப்பில் ஆழ்த்திய மாஸ்டர் பீஸை – கொடுத்து வரலாறு படைத்தனர். இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இன்னொரு படம் கொடுக்காதா என்று திரைத்துறையினரும், ரசிகர்களும் ஏங்கி, எதிர்பார்த்து காத்திருந்தனர். “இருவரும் ஏன் இணையவில்லை?” என்ற கேள்விக்கு “நல்ல கதை, திரைக்கதை கிடைக்கவில்லை. அது கிடைத்தால் இருவரும் மீண்டும் இணைவோம்” என்று சொல்லி வந்தார் கமல்ஹாசன். இப்போது சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ‘தக் லைஃப்’பில் இணைந்துள்ளதால், ‘நல்ல கதை, திரைக்கதை கிடைத்துவிட்டது போலும்’ என்ற மகிழ்ச்சியில் இப்படத்தின் மீது ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதலாக, இளம் ஹீரோ சிலம்பரசன் இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும், அவரும் கமல்ஹாசனும் பரஸ்பரம் ஒருவர் கழுத்தை மற்றவர் நெரிக்கும் ஸ்டில்லும், ஆவலைத் தூண்டும் டீசர், டிரெய்லர், பாடல்கள் ஆகியவையும் வெளியான பின் இந்த எதிர்பார்ப்பு பன்மடங்காக எகிறிவிட்டது. தற்போது திரைக்கு வந்திருக்கும் இந்த ‘தக் லைஃப்’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்), டெல்லியில் பலம் பொருந்திய தாதாவாகத் திகழ்கிறார். அவருக்கும் போட்டி தாதா ஒருவருக்கும் (மகேஷ் மஞ்ச்ரேக்கர்) இடையே பகை மூளுகிறது. இது தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது தாதா ரங்கராய சக்திவேலை படுகொலை செய்ய முயற்சி நடக்கிறது. அப்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் நியூஸ் பேப்பர் போடும் ஓர் அப்பாவி (இளங்கோ குமரவேல்) மீது தவறுதலாக குண்டு பாய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். அவரது சடலம் அருகே அழுதுகொண்டிருக்கும் அவரது மகனான சிறுவன் அமரனைப் பார்த்து அனுதாபம் கொள்ளும் தாதா சக்திவேல், அச்சிறுவனைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொள்வதோடு, அவனையே கேடயமாக பயன்படுத்தி, எதிரிகளிடமிருந்து தப்பிக்கிறார். இந்த கலவர நிகழ்வின்போது தனது தங்கையான சிறுமி சந்திராவைத் தொலைத்து விடுகிறான் அமரன். அவளை கண்டுபிடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, அமரனை தன்னோடு அழைத்துச் சென்று, தன் மகன் போல் வளர்க்கிறார் சக்திவேல். அமரன் வளர்ந்து வாட்டசாட்டமான இளைஞர் (சிலம்பரசன்) ஆகிறார்.
தாதா சக்திவேலின் அண்ணன் மாணிக்கம் (நாசர்). அவருடைய மகளின் தற்கொலைக்குக் காரணமானவனை சக்திவேல் கொன்றுவிட்டு சிறை செல்ல நேரிடும்போது, தனது ‘தாதா பொறுப்பு’ முழுவதையும் தன் வளர்ப்பு மகன் அமரனிடம் ஒப்படைத்துவிட்டுப் போகிறார்.
சக்திவேல் சிறையிலிருந்த காலத்தில் தன் பலத்தையும், செல்வாக்கையும் வளர்த்துக்கொள்கிறார் ‘இளம் தாதா’ அமரன். சிறையிலிருந்து வெளியே வரும் சக்திவேல், தன்னை விட அமரனுக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்து சஞ்சலம் அடைகிறார். இளம் வயதிலேயே ’தாதா தொழிலில்’ இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டானே என்று சக்திவேலின் மனதில் இலேசாக பொறாமை எட்டிப் பார்க்கிறது. தன் மீது நடத்தப்படும் ஒரு கொலைவெறி தாக்குதலுக்கு அமரன் காரணமாக இருக்கலாம் என்றுகூட சந்தேகப்படுகிறார்.
இதையறிந்து வருத்தப்படும் அமரனிடம், “உன் அப்பாவை அந்தக் காலத்தில் சுட்டுக்கொன்றதே சக்திவேல் தான்” என்று தூபம் போட்டு வெறுப்பை வளர்க்கிறார்கள் அமரனின் விசுவாசிகள். இதனால் சக்திவேலை கொலை செய்து அவரது இடத்தை அடையத் திட்டமிடும் அமரன், தன் சகாக்களுடன் சக்திவேலை நேபாளத்துக்கு நைசாக அழைத்துச் சென்று, அங்குள்ள பனிமலையில் சக்திவேலை துப்பாக்கியால் சுட்டு, பயங்கர பள்ளத்தாக்குக்குள் தள்ளிவிடுகிறார்.
பிறகு என்ன நடந்தது? சக்திவேல் உயிரிழந்தாரா, உயிர் பிழைத்தாரா? அவரது சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் அமரனின் கனவு நனவானதா, இல்லையா?” என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் விடை அளிக்கிறது ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் ரங்கராய சக்திவேலாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி, தனித்தன்மையோடு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கமல்ஹாசன் இந்த படத்திலும் ரங்கராய சக்திவேலாக வலம் வருவதற்கு நிறைய உழைப்பைப் போட்டிருக்கிறார். மூன்று காலகட்டங்களில் வித்தியாசமான மூன்று கெட்டப்களில் வரும் அவர், உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவற்றிலும் வேறுபாடு காட்டி மிரட்டியிருக்கிறார். மனைவி மற்றும் வைப்பாட்டியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளிலும், பம்பரமாய் சுழன்று எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சிகளிலும் இன்றைய இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். இந்த வயதிலும் இப்படி ஒரு நடிப்பா என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
ஆரம்பத்தில் இரண்டாம் ஹீரோவாகத் தோன்றி, பின்னர் வில்லனாக மாறும் அமரன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார். கமல்ஹாசன் முன் நடிக்கிறோம் என்ற எந்த பயமும் இல்லாமல், அவரோடு போட்டி போட்டு, ஆர்ப்பரிப்பாக நடித்திருப்பது கண்கொள்ளக் காட்சி. குறிப்பாக, ”இனிமேல் நான் தான் ரங்கராய சக்திவேல்” என்று அவர் ஆக்ரோஷமாக வசனம் பேசும் காட்சியும், அவரும் கமல்ஹாசனும் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் மாஸ்…!
கமல்ஹாசனின் மனைவி ஜீவாவாக அபிராமி நடித்திருக்கிறார். குடும்பப் பாங்கான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கணவனுடன் ஊடல் புரிவது, பின்னர் ஊடலைக் கைவிட்டு இணங்கிப் போவது என நல்லதொரு மனைவியாய் ரசிக்க வைத்திருக்கிறார்.
கமல்ஹாசனின் வைப்பாட்டியாக திரிஷா நடித்திருக்கிறார். அழகும் வனப்புமாய் திரையை அலங்கரிக்கிறார். காதல் காட்சியில் காதலனின் கன்னம் கடித்து வெறியேற்றுகிறார். திரிஷாவின் கார்டியனாக கலக்கல் மேக்கப்பில் வரும் வடிவுக்கரசி கலகலப்பை ஏற்படுத்துகிறார்.
ஸ்டைலிஷான போலீஸ் அதிகாரியாக மிடுக்காக வரும் அசோக் செல்வனும், அவரை விவாகரத்து செய்த பிறகும் அவருடன் நட்பாக இருக்கும் அவரது முன்னாள் மனைவியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமியும் நினைவில் நிற்கிறார்கள்.
கமல்ஹாசன் – அபிராமி தம்பதியின் மகளாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, கமல்ஹாசனின் அண்ணனாக வரும் நாசர், அடியாட்களாக வரும் ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள், விசுவாசியாக வரும் வையாபுரி, போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரக் கட்டமைப்புக்கு உட்பட்டு, பாத்திரம் உணர்ந்து, சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
“ஜிங்குச்சா…” என்ற பாடல் காட்சியில் வரும் சானியா மல்ஹோத்ராவின் நடனம் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது.
இப்படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். அவரது டச் ‘மேக்கிங்கில் இருப்பது போல் கதை, திரைக்கதையில் இல்லை என்பது பலவீனம். நம்பிக்கை துரோகத்தைச் சொல்லும் வழக்கமான கேங்ஸ்டர் கதையாக, பல பழைய கேங்ஸ்டர் கதைகளின் தொகுப்பாக இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. என்றாலும், வெறும் அடிதடி ஆக்ஷன் தாதா கதையாக மட்டும் இல்லாமல், அண்ணன் – தங்கை பாசம், கணவன் -மனைவி அன்பு என செண்டிமெண்டான குடும்ப உறவுகளையும் கதையில் இணைத்திருப்பது ஆறுதல் தருகிறது. கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும், புதுமையான திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சி அமைப்பு ஆகியவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
இப்படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் அதன் மிகப்பெரிய பலமாக உள்ளன. ரவி கே. சந்திரனின் ஒளிப்பதிவு, படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கிறது. காட்சிகள், குறிப்பாக பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள், கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, படத்தின் மற்றொரு முக்கிய அம்சம். பாடல்கள் அருமை. (எனினும், பல பாடல்கள் படத்தில் முழுமையாக இடம் பெறாதது ஏமாற்றமே.) பின்னணி இசை கதையோட்டத்துக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
அன்பறிவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, படத்தின் அதிரடி ஆக்ஷனுக்கு உயிர் கொடுத்துள்ளது.
படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இன்னும் சற்று சிரத்தை எடுத்து இரண்டே முக்கால் மணி நேரப்படத்தை இரண்டேகால் மணி நேரப் படமாக சுருக்கியிருந்தால் படம் இன்னும்கூட சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்.
‘தக் லைஃப்’ – கமல்ஹாசன், சிலம்பரசன் ஆகியோரின் அற்புதமான நடிப்புக்காக பார்க்கலாம்; ரசிக்கலாம்; மகிழலாம்!
ரேட்டிங்: 3.5/5.