“8 தோட்டாக்கள்’ படத்துக்காக எம்.எஸ். பாஸ்கருக்கு தேசிய விருது கிடைக்கும்!” – நாசர்

இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘8  தோட்டாக்கள்’. ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தை, ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாபாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி, மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் இசை உரிமையை ‘யு 1 ரெகார்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கிய அடுத்த கணமே, இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது.

இப்படம் குறித்து நாசர் கூறுகையில், “இளம் திறமையாளர்களால் தமிழ் திரையுலகமே  தற்போது நிரம்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் அந்த வரிசையில்  இணைய இருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். அவர் என்னிடம் இந்த கதையை கூறும்போது கூட எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை வரவில்லை, ஆனால் முதல் நாள் படப்பிடிப்பில் அவர் படக்குழுவினரை கையாண்ட விதம் என்னை முழுவதுமாக வியப்பில் ஆழ்த்திவிட்டது. எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ஒரு காட்சியைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போய்விட்டேன். இந்த ஒரு  காட்சிக்கு எம்.எஸ்.பாஸ்கர் நிச்சயம்  தேசிய விருது பெறுவார்” என்றார் நம்பிக்கையுடன்.

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா கூறுகையில், “இத்தகைய வலுவான கதையம்சம் நிறைந்த படத்தை தேர்வு செய்த ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேல் அவர்களுக்கும், இந்த படத்தின் தயாரிப்பு வேலைகளை மிக அழகாக கையாண்டு இருக்கும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ ஐ பி கார்த்திகேயன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஸ்ரீ கணேஷ் போன்ற ஒரு திறமையான படைப்பாளியை  அறிமுகபடுத்தி, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து இருக்கிறது ‘வெற்றிவேல் சினிமாஸ்’ நிறுவனம். நிச்சயமாக தமிழ் திரையுலகை பெருமைப்படுத்தக் கூடிய திரைப்படமாக இந்த ‘8 தோட்டாக்கள்’ இருக்கும்” என்றார்.