“லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்”: ‘2 பாய்ண்ட் ஓ’ படவிழாவில் ரஜினி பேச்சு!

லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் ‘2 பாய்ண்ட் ஓ’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினி பேசியதாவது:

‘2 பாய்ண்ட் ஓ’ படப்பிடிப்பில் இருக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் சரியாக நடிக்க முடியவில்லை. எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. “நீங்கள் இல்லாமல் இந்த படத்தை பண்ண முடியாது. உங்களால் இயன்ற அளவு மட்டும் நடியுங்கள். இயலாதபோது லேசாக ஜாடை காட்டுங்கள். நான் கட் பண்ணிக்கொள்கிறேன்’ என்று கூறி எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

அதுபோல் தயாரிப்பாளர் சுபாஷ்கரனும், ‘உங்களுக்காக 40 நாள் அல்ல, 4 மாதம் அல்ல, 4 வருடம் காத்திருந்து, உங்கள் உடல் நிலை சரியான பிறகுகூட இந்த படத்தை எடுத்துககொள்கிறேன். எனக்கு படம் முக்கியம் அல்ல, நீங்கள் தான் முக்கியம்’ என்றார். இவரை போன்ற ஒரு நல்ல நண்பரை பார்ப்பது கடினம்.

முதலில் படப்பிடிப்பு துவங்கும்போது 300 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டது. பின்பு அது 500 கோடி ஆகி, இப்போது 550 கோடியில் வந்து நிற்கிறது. கண்டிப்பாக அதைவிட இரண்டு மடங்கு லாபத்தை படம் வசூலித்துக் கொடுக்கும்.

எப்போது வரும்? வருமா, வராதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. வருவது முக்கியம் அல்ல. லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும். கரெக்ட்டா வந்து கரெக்ட்டா அடிக்கணும். வந்தாச்சு வெற்றி உறுதியாகிவிட்டது. ஹிட் ஆக்குவதுதான் பாக்கி. நான் படத்தை சொன்னேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

t12

இயக்குனர் ஷங்கர் பேசுகையில், “2 பாய்ண்ட் ஓ’ படத்தில் ரஜினி, அக்ஷய் குமார் கடுமையாக உழைத்து நடித்தனர் .உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கிளைமேக்சில் நடித்தார் ரஜினி. நல்ல கதை அமைந்தால் 3 பாய்ண்ட் ஓ’ படம் எடுக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். இந்த வயதிலும்கூட கடினமாக உழைப்பவர். அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டார்” என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார், “ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கருடன் 2 பாய்ண்ட் ஓ’ படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி”  என தமிழில் பேசினார்.

நடிகை எமி ஜாக்சன் பேசுகையில், “இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த ஷங்கர் அவர்களுக்கு நன்றி” என்றார்.

கலை இயக்குனர் முத்துராஜ் பேசுகையில், “நான் ரஜினி சார் ரசிகனாக இருந்து, அவர் படத்துலயே வேலை பார்த்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. ஷங்கர் அவர்களுக்கும், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்களுக்கும், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.