“என் ஒவ்வொரு படமும் வெளியாகும்போது திருவிழாவாக அமைகிறது”: ‘2.0’ விழாவில் ரஜினி பெருமிதம்!

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. இது முன்னர் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படத்தை  லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டது. இதற்கான வெளியீட்டு விழா மும்பையில் உள்ள யாஷ்ராஜ் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில், “இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றுவது மிகவும் கடினம். ஏனென்றால் அவர் மிகவும் துல்லியமாக பணியாற்றக் கூடியவர். ‘2.0’ திரைப்படம் 3டியில் உருவாகிறது. அதேபோல இப்படத்தின் நாயகன் நானல்ல. அக்‌ஷய்குமார் தான். இப்படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெருமிதப்படக்கூடிய படைப்பாக, ஹாலிவுட் தரத்துக்கு இருக்கும். என்னுடைய ஒவ்வொரு படமும் வெளியாகும்போது, கடவுளின் அருளாலும், ரசிகர்களின் ஆதரவாலும் திருவிழாவாக அமைகிறது. சல்மான் கான் தயார் என்றால் அவரோடு நடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

அக்‌ஷய்குமார் பேசுகையில், “என்னுடைய திரையுலக வாழ்வில் நான் மேக்கப் போட்டதில்லை. ‘2.0’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்காக நீண்ட நேரம் அமர்ந்து மேக்கப் போட்டேன். அதனை மறக்க முடியாது. கண்டிப்பாக ‘2.0’ திரைப்படம் இந்தியத் திரையுலகில் சாதனை படைக்கும். ரஜினி சாருக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது. அனைவரும் அவரிடமிருந்து, எப்படி உடை, கண்ணாடி உள்ளிட்டவை அணிவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

இயக்குன்ர் ஷங்கர் பேசுகையில், “‘எந்திரன்’ படத்தில் நான் செய்ததையே இன்னும் சிறப்பான முறையில் இதில் செய்ய வேண்டிய கட்டாயம். ‘எந்திரன்’ திரைப்படம் இமயமலை ஏறுவது போன்றது. ஆனால் ‘2.0’ திரைப்படம் தோளில் இருக்கும் ஒரு இமயமலையைப் போன்று இருந்தது. கண்டிப்பாக ‘எந்திரன்’ 3வது பாகம் இருக்கும்” என்றார்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான்கான் பேசுகையில், “ரஜினி சார் இங்கு இருக்கிறார் என்று தெரிந்தவுடன், என்னை அழைக்காமலே தலைவர் ரஜினி சாரை சந்திக்க வந்துள்ளேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ‘2.0’ பர்ஸ்ட் லுக் பிரமாதமாக இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் எப்போதுமே பெரிதாக சிந்திக்கக் கூடியவர்” என்றார்.