“ஜெ.வின் சரியான வாரிசு என்பதால் சசிகலாவை எதிர்க்கிறேன்!”

சசிகலாவை எதிர்ப்பதற்கும், அவர் முதலமைச்சர் ஆவதற்கு வருந்துவதற்கும் காரணம் அவர் ஜெயலலிதாவின் சரியான வாரிசு என்பதாக இருப்பதுதான் பொருத்தமே தவிர அவர் தவறான வாரிசு என்பதாக இருக்க முடியாது.

ஜெயலலிதாவுடன் சேர்ந்து இயங்கினார், இயக்கினார். இப்போது அவர் இல்லாமல் நேரடியாக பதவிக்கு வருகிறார். மக்கள் நிராகரிப்பார்கள் என்று நம்புவதும், விரும்புவதும் அர்த்தபூர்வமானதுதான். ஆனால் அதிர்ச்சியடைவதோ, ஜெயலலிதா இருந்த இடத்தில் இவரா என்பதோ ஏதோ ஜெயலலிதா களப்பணி செய்து, இயக்கம் கட்டியமைத்து அரசியல் அணியை உருவாக்கி முதல்வரானது போல ஒரு ஞாபக மறதி சொல்லாடலையே உருவாக்குகிறது.

சினிமாவில் சேர்ந்து நடித்த பிம்ப உருவாக்கத்தின் அடிப்படையில் ஒருவர் ஒரு அரசியல் இயக்கத்தை கைப்பற்ற முடியும் என்றால், அதை மக்கள் ஏற்கிறார்கள் என்றால், ஒரு தலைவருடன் உடன் வாழ்ந்து அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்றவர் ஏன் வாரிசாக கூடாது என்ற கேள்வி முக்கியமானது.

எனவே ஜெயலலிதாவின் சரியான வாரிசு என்பதால் சசிகலாவை எதிர்க்கிறேன். அவர் தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும் என விரும்புகிறேன். மன்னார்குடி மாஃபியாவின் முக்கிய உறுப்பினர் ஜெயலலிதாதான். நிறுவனர் என்றுகூட சொல்லலாம்.

RAJAN KURAI KRISHNAN