“மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுக”: மாநிலங்களவையில் வைகோ உரை

மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று (30.07.2019) ஆற்றிய உரை வருமாறு:-

தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அம்பரப்பர் மலை என்ற கடினப் பாறைகளை உடைத்து நொறுக்கி, நியூட்ரினோ துகள்கள் ஆய்வு மையத்தை அமைக்க இந்திய அரசு திட்டம் வகுத்து இருக்கிறது.

அதற்காக, 1200 டன் டைனமைட் வெடி பொருட்களைப் பயன்படுத்தி 12 லட்சம் டன் கடினப் பாறைகளையும் ஒட்டுமொத்தமாக 20 லட்சம் டன் பாறைகளையும் உடைத்து நொறுக்கப் போகிறார்கள்.

இந்த சுரங்கம் ஒரு கிலோ மீட்டர் நீளம் 25 மீட்டர் அகலம் 15 மீட்டர் சுற்றளவில் அமைகிறது.

உள்ளே பக்கவாட்டில் மேலும் இரண்டு சுரங்கங்கள் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குத் தோண்டப் போகிறார்கள்.

இந்த மூன்று சுரங்கங்களும் இணைகிற மையப் புள்ளியில் மட்டும் 11 லட்சம் டன் பாறை வெட்டி எடுக்கப்பட இருக்கிறது.

இந்த நியூட்ரினோ திட்டத்தால் உலகின் தொன்மையான கடினப் பாறைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் மிகக் கடுமையான சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு ஏற்பட இருக்கிறது.

இந்த மேற்குத் தொடர்ச்சி மலையை, ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ பண்பாட்டு மையம் உலக பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து இருக்கிறது.

இங்கே சுரங்கம் தோண்டும்போது, 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை உடைந்து நொறுங்கும். அதேபோல, பென்னி குயிக் கட்டிய, தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்குகிற, முல்லைப் பெரியாறு அணையும் உடைந்து நொறுங்கும்.

நியூட்ரானுக்கும் நியூட்ரினோவுக்கும் உள்ள வேறுபாட்டை நான் அறிவேன்.

நியூட்ரினோ திட்டம் அமைய இருக்கிற இடத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் கேரள எல்லை தொடங்குகிறது. அங்கே மதிகெட்டான் சோலை காடுகள் உள்ளன. இவை ’பாதுகாக்கப்பட்ட காடு’களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிற நிலநடுக்கங்கள் குறித்து புவியியல் அறிஞர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இந்த நியூட்ரினோ திட்டம் 7000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் அமெரிக்காவில் உள்ள ~பெர்னி என்ற ஆய்வுக்கூடத்துடன் இணைக்கப்படுகிறது.

மேலும், இந்த ஆய்வகத்தில் அணுக்கழிவுகளை வைத்துப் பாதுகாக்கப் போகிறோம் என்று இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை நான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியபோது,, அது எழுத்துப் பிழை என்று மத்திய அரசு சொன்னது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் வழக்குத் தொடுத்து வாதாடினேன். அப்போது, இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற, மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேற்கோள் காட்டினேன். எனவே 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22 ஆம் நாள் மதுரை உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து இருக்கிறது.

அதேபோல, பூவுலகின் நண்பர்கள் என்ற தொண்டு நிறுவனம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தடை ஆணை பெற்று இருக்கிறது.

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, 2018 ஆம் ஆண்டு மே மாதம் நான் மதுரையில் இருந்து கம்பத்திற்கு 200 கிலோமீட்டர் தொலைவுக்கு பிரச்சார நடைபயணம் மேற்கொண்டேன். அதன் தொடக்க நாளில் மறுமலர்ச்சி திமுகழகத்தின் விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவகாசி ரவி தன் மேனிக்குத் தீ வைத்துக்கொண்டு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தன் உயிரை ஈந்தார்.

இந்த நியூட்ரினோ திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று, உலகின் எந்த இடத்திலும் உள்ள அணுகுண்டுகளை செயல் இழக்கச் செய்வதாகும்.

எனவே, நாகசாகி ஹிரோஷிமா போல எதிரி நாடுகளின் முதன்மையான தாக்குதல் மையமாகத் தமிழ்நாடு ஆகிவிடும் ஆபத்து ஏற்பட்டு இருக்கின்றது.

கேரள மாநில முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன்சாண்டி ஆகியோர் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர்.

எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடுமாறு இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

கேரள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். “வைகோவின் கருத்தை நாங்களும் ஆதரிக்கிறோம்” என்றனர்.