ஹன்சிகாவின் அழகை வர்ணித்ததால் பொறாமை அடைந்த ஜெயப்ரதா!

முன்னாள் நடிகை ஜெயப்ரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கத்தில், சித்து, ஹன்சிகா,ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘உயிரே உயிரே’. ஜெயப்ரதா தனது மகன் சித்துவை இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

விவேகா எழுதியுள்ள பாடல்களுக்கு அனுப்ரூபன் இசை அமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் பேசுகையில், “தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ படத்தின் ரீமேக் தான் இந்த ‘உயிரே உயிரே’. தெலுங்கில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு ஜெயப்ரதா மேடம் என்னை அழைத்து ‘இந்த படத்தை தமிழில் கட்டாயமாக நாம் செய்ய வேண்டும்’ என்றார். நான் அவர்களிடம் வைத்த ஒரே வேண்டுகோள் – ஹன்சிகா இந்த படத்திற்கு நாயகியாக வேண்டும் என்பதே. கேரளா ஆலப்பியில் மாலை 41/2-6 மணி வரையில் கிடைக்கக்கூடிய அந்த லைட்டிங்கில் ‘ஓ பிரயா’ என்ற ஒரு பாடல் எடுத்தோம். ஹன்சிகாவுடைய  ஒத்துழைப்பு இல்லாமல் அந்த பாடலை எடுத்திருக்க முடியாது. சித்துவும், ஹன்சிகாவும் அருமையாக நடித்துள்ளனர். காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கரு” என்றார்.

வசனகர்த்தா பாலாஜி பேசுகையில், “எனக்கு இது அறிமுகப்படம். காதல் திருமணங்களைப் பற்றிய ஒரு அருமையான பதிவு இந்த படம். இந்த படத்திற்குப் பிறகு ஹன்சிகாவிற்கு தமிழகத்தில் கோவில் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.

இசையமைப்பாளர் அனுப்ரூபன் பேசுகையில், “தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் பணியாற்றிய எனக்கு தமிழில் முதல் படம் இது. இந்த படத்தில் ஜெயப்ரதா மேடம் ஒரு பாடல் பாடியுள்ளார். பாடல் காட்சிகள் மட்டுமின்றி அனைத்துமே மிகச் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜெயப்ரதா பேசுகையில், “இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படமாக அமையும். எங்களது புரொடக்சன் கம்பெனியில் பல்வேறு மொழிகளில் நாங்கள் படங்கள் தயாரித்துள்ளோம். இந்த படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு எனது மகன் சித்துவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறோம்.

எனக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு வேறு எங்கும் கிடைக்காதது. எனவே என்னுடைய குடும்பத்திலிருந்து ஒருவர் இந்தத் துறைக்கு வந்தால் அது தமிழில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்பது என் கனவு. இந்தப் படம் மூலமாக அது நிறைவேறியுள்ளது.

‘லெஜண்ட்ரி இயக்குனர் சத்யஜித்ரே என்னிடம், ‘நடிகைகளிலேயே நீ மிக அழகான பெண்’ என்று கூறுவார். ஆனால், இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேகா ஹன்சிகாவை ‘அழகே அழகே’ என வர்ணித்தது எனக்கு சற்று பொறாமையாகத் தான் இருந்தது. ஹன்சிகாவின் நடிப்பு இந்தப் படத்தின் மூலம் இன்னும் மெருகேறியுள்ளது” என்றார்.