“முதல்வர் பேச்சை தவறு என சொல்பவன் இன்னும் பண்ணையார் மனநிலையில் இருக்கிறான்!”

முதல்வர் பேசியதில் தவறு இருப்பது போன்று பிரச்சாரம் செய்கிறார்கள்!

வரலாற்றில் மிக சில உரைகளே வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகள் அந்த உரைகள் ஏன் சிறப்பான உரைகள் என வரலாறு சொல்கிறது என்றால் அது பேசப்படும் காலத்தாலும் அரசியல் சூழலாலும் முக்கியத்துவம் பெறுகிறது. யாசிர் அராபத், பிடல் காஸ்ட்ரோ என எத்தனையோ உரைகளைச் சொல்கிறோம். அதே போன்ற ஒரு உரைதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேற்றைய உரை.

உண்மையில் பாஜகவினர் என்ன நினக்கிறார்கள் என்றால் மேடை நாகரீகம் என்பதே முகஸ்துதி என்பதுதான். நேற்று பிரதமர் தெலங்கானாவுக்குச் சென்றார். அங்கே முதல்வர் சந்திரசேகர ராவ் அவரை வரவேற்கச் செல்லவில்லை. சென்றது பாஜக முன்னாள் தலைவரும் இப்போதைய ஆளுநருமான தமிழிசை மட்டும்தான். தெலங்கனாவின் நேற்றில் உச்சக்கட்ட மோதல் சூழல் உருவாகியுள்ளது தனிக்கதை.

தமிழ்நாட்டில் இந்த மோதல் பல நுற்றாண்டுகளாக இருந்து வருவதன் தொடர்ச்சிதான். இன்று பாஜகவில் இருந்து கொண்டு திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள் முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து எதிர்த்தார்கள். பாஜகவின் வெற்றியே தனக்கான இந்துத்துவ முகங்களின் ஒரு பாதியை காங்கிரஸ் கட்சியில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்து கூட்டு உளவியலில் காங்கிரஸ் தோல்வியடைந்து நிற்பதற்கு இதுவே பிரதானமான காரணம். அவர்கள் காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து பாஜகவுக்கு இடம்மாறி விட்டார்கள். இது போக அஸ்திவாரமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர்.

இவர்கள் நேற்று ஒரு பிரமாண்ட வரவேற்பைக் காட்டி அச்சுறுத்தி முதல்வரை பணிய வைக்க முயன்றார்கள். பிரதமர் வருகிறார், 31 ஆயிரம் கோடிக்கு தருகிறார் என்று குய்யோ முய்யோ என சத்தம் போட்டால் முதல்வர் தன் இயல்பில் இருந்து மாறி தங்களை புகழ்ந்து விட்டு போய் விடுவார் என்று நினைத்தார்கள். அவரோ காரண காரியத்தோடு மோடியை வரவேற்றார். நன்றியும் சொன்னார். பின்னர் தனது கொள்கை என்ன தனது மாநிலத்தின் நிர்வாக அலகிற்கு, கட்டமைப்பிற்கு என்ன பெயர் என்பதைச் சொல்லி, அதற்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். அந்தக் கோரிக்கைகளின் நியாயத்தைச் சொல்ல தங்கள் மாநிலம் இந்திய வளர்ச்சிக்கு ஆற்றும் பங்கை சுட்டிக்காட்டினார். இது போன்ற உரைகள் இந்திய சுதந்திர வரலாற்றில் அரிதினும் அரிதானது.

இதை தவறு எனச் சொல்பவன் இன்னும் பண்ணையார் மன நிலையில் இருக்கிறான் என்று பொருள். திராவிடப்பாசறையில் இருந்து வந்த ஒருவர் இத்தனை நுண்ணுணர்வோடு ஆளுமைத் திறனோடு இருப்பதுதான் சிறப்பு. அது மக்களால் கொண்டாடப்பட காரணமும் அதுவே!

Arul Ezhilan பதிவு