சனி பெயர்ச்சி – ராசி பலன்கள்: சொல்லுகிறார் திருமுருகன் காந்தி!

ஆயிரம் ஜோசியக்காரன், சாமியார், நல்ல நேரம், பூசைகள், யாகங்கள் என பார்த்த ஜெயலலிதாவிற்கு என்ன ஆனது என்பதை நாம் பார்த்தோம். அவரோடு சேர்ந்து இதில் கவனமெடுத்து அக்கறை கொண்ட சசிகலா எங்கே இருக்கிறார் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ராசி, பெயர்ச்சி என வியாபாரம் செய்யும் கும்பல் தான் இன்று சசிகலாவை சிறையில் வைத்திருக்கிறது. அவரை காக்க எந்த சாமியும் வரவில்லை, எந்த பெயர்ச்சியும் உதவவில்லை, எந்த பரிகாரமும் உபயோகமாகவில்லை. இந்த கருமத்தையெல்லாம் சொல்லி வயிறு வளர்க்கும் கும்பல் தான் வசதியான கும்பலாக வளர்ந்திருக்கிறது.

நீங்கள் ஜெயலலிதா, சசிகலாவை விட சிறந்த சாமியாரையோ, சோசியக்காரரையோ, பூசை செய்பவரையோ வாடகைக்கு எடுத்துவிட முடியாது. இந்த தொழிலில் சிறந்தவர்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து அந்த நபர்கள் சொன்ன நிறம், தினம், நேரம், சடங்கு, சம்பிரதாயம் பார்த்த இவர்களுக்கே இந்த கதியெனில், தெருமுனையில் இருக்கும் ஜோசிய வணிகனையும், பத்திரிகையில் இரண்டு பத்தி எழுதும் மார்க்கெட் ஜோசியனையும், டிவியில் காசு கொடுத்து எதிர்காலம் சொல்லும்
ஜோசிய ப்ரோமோட்டர்களையும் நம்பி ஏதேனும் செய்து காசையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள். ஏனெனில் இந்த கும்பல்கள் நாம் கஷ்டப்படும்போது ‘நேரம் சரியில்லை, கொஞ்ச நாள் ஆவும், வேனும்னா பரிகாரம் செய்யலாம், கொஞ்சம் செலவாகும், பரவாயில்லையான்னு’ சொல்லி கல்லா கட்டிவிடுவார்கள்…

ஜாலிக்காக கூட ஜோசியம் பார்த்துவிடாதீர்கள் என்ற எச்சரிக்கையை ஜெ-சசி மூலமாக நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். 2016-ல எந்த சோசியக்காரனாவது ஜெயலலிதா கிட்ட அப்பல்லோ பத்தி சொல்லி இருப்பானா?… இவ்ளோ ஏன்… திடீர் நகர்ல வாய்க்காலை மறைச்சு அப்போல்லோ கட்டுன கட்டிடத்தை ஜெயலலிதா திறந்து வச்சப்போ கூட இந்த ட்ராஜடி பத்தி சொல்லல இந்த ஜோசிய மாந்திரீக கும்பல்ஸ்…!. இத்தனைக்கும் அப்போல்லோவோட கலர்ல லைட்டா பச்சை சேர்ந்து இருக்கும்…

ஜோசியம் பார்க்காத ஒபாமாவும் , ட்ரம்பும், புதினும் தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கார்கள். அவர்களிடத்தில் கோரிக்கை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது ஜோசியக்கார 56 இன்ச் கும்பல்.

ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் நேரமும், கிரகமும் சரியில்லை என்பதாகவே ஓடிட்டிருக்கு, இதுல யாருக்கு நல்ல நேரம் இருந்துட முடியும்?… கூடன்குளம் வெடிச்சா கடக ராசிக்காரனும், துலா ராசிக்காரனும் தப்பிச்சிட முடியுமா என்ன?..

தமிழ்நாட்டிற்கு பிடிச்ச கெட்ட காலம் ஓபிஎஸ்-ஈபிஎஸ், கெட்ட ராசி தாமரை, கெட்ட திசை வடக்குல இருக்குற டில்லி, கெட்ட வாய் எச்.ராஜா, பிடிச்ச சனி பாஜக, . நம்மளோட கஸ்ட காலம் காங்கிரஸ்ல இருந்து பாஜகவுக்கு மாறி இருக்கறது தான் ஒரே மாற்றம்.

மத்தபடி இந்தியாவோட 1947-ல் நாம் சேர்ந்த நேரம் எமகண்டம், சேர்த்ததிலிருந்து நமக்கு பிடிச்சது ஜென்ம சனி.. இப்போதைக்கு அவ்ளோ தான் ராசி பலன் நமக்கு…!

திருமுருகன் காந்தி

மே 17 இயக்கம்