“அரசியல் பயணத்தை ஆற்றில் தொடங்கும் கமல் நன்றாக நீந்தி கரையேறுவார்”: திருமா பாராட்டு!

“நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் நன்றாக நீந்தி கரையேறுவார்” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை கமல்ஹாசன், எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார்.

இது குறித்து கோவையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், “கமல்ஹாசன் தீவிரமான மக்கள் பணியில் ஈடுபட இருக்கிறார் என்பதையே இன்றைய களப்பணி உணர்த்துகிறது. அவர், கொசஸ்தலை ஆற்றைப் பார்வையிடும் பணியில் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது.

கடந்த காலங்களில் திரைத்துறையில் தீவிரமாக பணியாற்றிய கமல்ஹாசன் அதில் முத்திரை பதித்துள்ளார். அதேபோல், அரசியலிலும் அவர் முத்திரை பதிப்பார் என நம்புகிறேன்.

நடிகர் கமல்ஹாசன் ஆற்றில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் நன்றாக நீந்தி கரையேறுவார். கமல்ஹாசனுக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.