தற்காப்பு – விமர்சனம்

போலீஸின் போலி என்கவுண்ட்டர் என்ற சமூகவிரோத அராஜகத்தை ‘சாகசம்’ என ஆதரித்தும், இதனை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்களை இழிவுபடுத்தியும் படம் எடுத்துப் பிழைக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற இயக்குனர்களை தலையில் குட்டும் வண்ணம் கம்பீரமாக வெளிவந்திருக்கிறது ‘தற்காப்பு’.

போலீஸ் அதிகாரி சக்தி என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கிறார். உயரதிகாரிகளின் ஆணைப்படி, அவர்கள் தீர்மானிக்கும் நபரை சக்தி என்கவுண்ட்டர் செய்து வருகிறார். அந்த வரிசையில் ரியாஸ்கானையும் போலி என்கவுண்ட்டர் செய்கிறார் சக்தி.

இந்த என்கவுண்ட்டர் குறித்து மனித உரிமை ஆணையத்திற்கு புகார் செல்கிறது. மனித உரிமை ஆணையத்தில் உயரதிகாரியாக இருககும் சமுத்திரகனி, இந்த என்கவுண்ட்டரில் சம்பந்தப்பட்ட சக்தி உள்ளிட்ட மூன்று போலீஸ்காரர்களை விசாரிக்கிறார்.

ரியாஸ்கானை அவர்கள் போலி என்கவுண்ட்டர் மூலமாகத்தான் கொன்றிருக்கிறார்கள் என்பதை சமுத்திரகனி கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் தகுந்த சாட்சியங்கள் இல்லாததால் அதை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் சமுத்திரகனி இருக்கிறார்.

செல்வந்தர்களும், தொழிலதிபர்களும், உயரதிகாரிகளை கைக்குள் வைத்துக் கொண்டு உங்களை கூலிப்படையாக பயன்படுத்தி என்கவுண்ட்டர்கள் செய்கிறார்கள் என்று சக்தியிடம் சமுத்திரகனி கூறுகிறார். இதைகேட்ட சக்தி தாம் செய்த தவறை உணர்கிறார்.

இதையறிந்த உயரதிகாரிகள், கோர்ட்டில் சக்தி உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுவார் என்பதற்காக, சக்தியை குற்றவாளியாக்கி அவரை என்கவுண்ட்டரில் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இதிலிருந்து சக்தி தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கும் சக்தி, மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு ஜோடி இல்லை. போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவு பொருந்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

மனித உரிமை ஆணைய அதிகாரியாக வரும் சமுத்திரகனி, அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி கைத்தட்டல் பெறுகிறார். இவர் பேசும் வசனங்கள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

சக்தியை தவிர படத்தில் ஆதித், சுவராஜ் என்ற இரண்டு கதாநாயகர்களும், வைசாலி தீபக், அமிதா என்ற இரண்டு கதாநாயகிகளும் நடித்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை இவர்கள் திறமையாக செய்திருக்கிறார்கள்.

செல்வந்தர்கள் தங்களது பணபலத்தால் சட்டத்தை எப்படி தவறாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரவி. என்கவுண்ட்டர் மூலம் உயிர்களை கொல்வது கண்டிக்கத்தக்கது என்றும், ஒரு உயிரை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றும், என்கவுண்ட்டரால் பல பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள் என்றும் அழுத்தமாக கூறியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

பைசல் இசையில் பாடல்கள் ரசிக்கும் விதம். பின்னணி இசையையும் சிறப்பாக அமைத்திருக்கிறார். ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

‘தற்காப்பு’ – சிறப்பு