தப்படிக்கும் கலைஞன் – ஒப்பாரி வைக்கும் பெண் காதல் கதை ‘தப்பாட்டம்’!

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் தயாரிக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படம் இவரது தயாரிப்பு நிறுவனமான சாகியா செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும்.

முஜிபூர் இப்படத்தை இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர்கள் மகேந்திரன், பிரியதர்ஷன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இதற்குமுன் ‘இரு நதிகள்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

‘தப்பாட்டம்’ படம் பற்றி இயக்குனர் முஜிபூர் கூறுகையில், “தப்படிக்கும் கலைஞனுக்கும், ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்படுத்துகிறது. இருவராலும் பிரச்சனைகளை சமாளிக்க முடிந்ததா? மீண்டு வந்தார்களா? என்பதை அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி மிகவும் எதார்த்தமாக சித்தரித்திருக்கிறோம்.

மனித உறவுகளின் மகத்துவத்தை இப்படம் ஆணித்தரமாக எடுத்துரைக்கும். இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, 1980 காலகட்டத்தில் நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கிளைமேக்ஸ் காட்சி அனைவரது மனதையும் உருக்கும்படியாக இருக்கும்.

கதாநாயகனாக புதுமுகம் துரை சுதாகர் நடிக்கிறார். இவர் நிலா புரோமோட்டர் நிறுவனத்தின் தலைவர். தப்பாட்ட கலைஞர் கதாபாத்திரத்திற்காக 40 நாட்கள் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டு நடித்துள்ளார்.

கதாநாயகியாக டோனா ரோசாரியோ நடித்துள்ளார். இவர்களுடன்  நான் (முஜிபூர்), துளசி, ரூபி, ஜெயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, சென்னை, திருவனந்தபுரம், நாகர்கோயில் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார் இயக்குனர் முஜிபூர்.

இசை – பழனி பாலு

படத்தொகுப்பு – ஆர்.சரண் சண்முகம்

கலை – பவானி ஈஸ்வரன்

சண்டை பயிற்சி – ஆக்ஷன் பிரகாஷ்

நடனம் – ராதிகா

ஊடகத் தொடர்பு – நிகில்