விருதுகளை குறிவைத்து பயணப்படும் ‘தகவி’ திரைப்படம்

‘ஆறடி’ என்ற பெண் வெட்டியாளின் கதையை படமாக்கி அனைவரிடமும் பாராட்டையும், பல விருதுகளையும், வாழ்த்துகளையும்  பெற்ற படக்குழுவினர் அடுத்து ‘தகவி’ என்ற தரமான குழந்தைகள் படத்தை எடுத்துள்ளனர்.

“ஆளும் வளரனும், அறிவும் வளரனும், அது தான்டா வளர்ச்சி… உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி… உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி…” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றைய சமுதாயத்தின் குழந்தைகளுக்கு  ஏற்ற ஜீவனான கருத்தைக் கொண்டு ‘தகவி’ படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன்  குதுாகலமாய் கலகலப்புடன் நடித்துள்ளார்.

குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று இப்படத்தை சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரித்துள்ளார்.

நான் கடவுள் ராஜேந்திரன்,  சிங்கம் புலி, அஜய் ரத்தினம் ஆகியோருடன்  ராகவ்  மற்றும் ஜெய்போஸ் இருவரும் கதாநாயகன்களாக நடிக்க இவர்களுடன் சாப்ளின் பாலு, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், வெங்கல்ராவ், தேவி, உமா, ஜீவிதா, ஐந்து கோவிலான், கிங்காங், விஜயபாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்

சேலம், ஏற்காடு, ஒடஞ்ச பாலம், விநாயகம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, உட்பட அதனை சுற்றி உள்ள இடங்களில் படத்தை எடுத்துள்ளனர்.

அரிகாந்த் கேமராவையும், கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசையையும், எம்.சக்திவேல் கதை – வசனத்தையும், டாக்டர் .சி.சரவண பிரகாஷ் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர். சந்தோஷ்குமார்.ஜெ திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். (விருதுகள் பல பெற்றுத்தந்த ‘ஆறடி’ படமும் இவர் இயக்கியது தான்)

’தகவி’ திரைப்படம் நவடா இண்டர்நேஷனல் பிலிம் திரைவிழாவில் சிறந்த படத்தொகுப்பாளர் விருதினை சந்தோஷ்குமாருக்கு பெற்றுத்தந்தது.

பாரத் இண்டர்நேஷனல் பிலிம் விழா, மகாராஷ்ட்ரா இண்டர்நேஷனல் பிலிம் விழா , மாஸ்கோ இண்டர்நேஷனல் குழந்தைகள் பட விழா ஆகியவற்றிலும் கலந்துகொள்ள தேர்வாகி உள்ளது.

ரஷ்யாவில் உள்ள பெஸ்ட் புரோ பிலிம் விழா போட்டியில் அரை இறுதி வரைக்கும் சென்றுள்ளது.

சிறந்த குழந்தைகள் திரைப்படத்தின் விருதினை காசி  இண்டர்நேஷனல் படவிழா போட்டியில் கலந்துகொண்டு பெற்றது. அதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. தயாரிப்பாளர் நவீன்குமாரும், கதை வசனகர்த்தா சக்திவேலும் நேரில் கலந்துகொண்டு  விருதினை வாங்கினார்கள்.