தெலுங்கிலும் சக்கைப்போடு போடும் ‘பிச்சைக்காரன்’

இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி, தனக்கென்று தனி பாணி அமைத்து வெற்றிகரமான ஸ்டார் என வலம் வரும் விஜய் ஆண்டனிக்கு, சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பிச்சைக்காரன்’ வணிக ரீதியாக மிக பெரிய அந்தஸ்தைக் கொடுத்தது.

தமிழில் வெற்றி பெற்ற இந்த படம், தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. கடந்த வார இறுதியில் தெலுங்கில் வெளிவந்த ‘பிச்சகாடு’ பல்வேறு சாதனைகளை முறியடித்து வெற்றிப் படமாக உருவெடுத்து உள்ளது.

“இந்த வெற்றி இயக்குனர் சசி சாருக்கும், தெலுங்கில் இந்த படத்தை வெளியிட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும் உரியது என்று தான் நான் சொல்வேன். அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக் கூடிய ஒரு கதைக் கரு, தெளிவான திரைக்கதை அமைப்பு, நேர்த்தியான இயக்கம் என சசி சார் வழங்க, நான் என்ன சளைத்தவனா என்று மிக பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி, அதிக அளவில் திரையரங்குகள் எடுத்து, ‘பிச்சகாடு’ படத்தின் வெற்றியை உறுதி செய்த லக்ஷ்மன் சாருக்கும் உரியது இந்த வெற்றி.

“தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில் நிலைப்பது இல்லை என்ற கூற்றை  என் அடுத்தடுத்த படங்களின் கதை, மற்றும் மற்ற அம்சங்கள் பொய்யாக்கும் என்று  நம்புகிறேன்.

“இந்த வெற்றி ஒரு நடிகனாக என்னை இன்னமும் மேம்படுத்தி தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வர வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் தனக்கே உரிய அமைதியான, ஆனால் ஆழமான தீவிரத்துடன் விஜய் ஆண்டனி.