நீட்டை எதிர்த்து போராட அனுமதி தராததால் ஆசிரியை சபரிமாலா ராஜினாமா!

அரியலூர் மாணவி அனிதாவின் உயிரை குடித்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படாததால், தனது ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார் விழுப்புரம், வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை சபரிமாலா.

நீட் தேர்வால் தனது டாக்டர் கனவு பறிபோன வேதனையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, அதே பள்ளியில் படிக்கும் தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

0a1e

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது என அரசு சார்பில் அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு ஊழியராக இருந்துகொண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று அவர் எச்சரிக்கப்பட்டார்.

இதனால் வெறுப்படைந்த சபரிமாலா, தனது போராட்டத்தை தொடர்வதற்காக அரசு ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை விழுப்புரம் மாவட்டம் தொடக்கப்பள்ளி அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றிவருகிறேன். மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஓர் ஆசிரியராகக் கல்வி எழுச்சிகொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில், எனது வெளிப்பாட்டைத் தன்னெழுச்சியை 6.9.17 அன்று காலை 9.30 மணிக்கு எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அனுமதியில்லாமல் தொடரக் கூடாது என்றதும், 1.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காவல்துறையிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்னைக்காகக் குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம். சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை 7.9.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு சபரிமாலா தனது ராஜினாமா கடிதத்தில் உருக்கமாகக் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபரிமாலா, “’நீட் தேர்வுக்கு எதிராக பள்ளியில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அரசுப்பணியில் இருப்பவர்கள் இத்தகைய போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றார்கள். ஒரே கல்வி இல்லாத நாட்டில் ஒரே தேர்வு மட்டும் எப்படி இருக்க முடியும்? அதைக் கேட்க கற்பிக்கும் ஆசிரியருக்கு உரிமை இல்லை. அதனால் பணியைத் துறக்க முடிவு செய்து, ராஜினாமா கடிதத்தை அளித்திருக்கிறேன்.

வகுப்பறைகளில் ஆண்டுக்கு 30 மாணவர்களை உருவாக்கதான் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இனி கிராமங்கள்தோறும் சென்று லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்குவேன்.

என் ராஜினாமா முடிவை என் கணவரிடம் நான் தெரிவித்தபோது, ‘உன்னுடைய எண்ணங்களை முழு சுதந்திர உணர்வோடு வெளிப்படுத்தும் உரிமை உனக்கு உண்டு. வெற்றி பெறும் அனிதாக்களை வருங்காலத்தில் உருவாக்க என் வாழ்த்துகள் என்று என் கணவர் கூறினார்” என்றார் சபரிமாலா.