அதிமுக எதிர்ப்புக்கு பணிந்தது ஏன்?: ‘சர்கார்’ படக்குழு விளக்கம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ‘சர்கார்’ திரையிடப்படும் பல திரையரங்குகள் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். திரையரங்குகள் தாக்கப்பட்டன. விஜய் பேனர்கள் கிழித்தெறியப்பட்டன. காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் இப்படத்தின் வினியோகஸ்தரான தேனாண்டாள் பிலிம்ஸாரிடமும், இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அதிமுகவினர் ஆட்சேபிக்கும் சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படக்குழுவினர் ஒப்புக் கொண்டனர்.

அதன்படி சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு, மறுதணிக்கை செய்யப்பட்டு,  படக்குழுவினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”‘சர்கார்’ திரைப்படத்தில் வரும் சில காட்சிகளுக்கு எதிராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல திரையரங்குகள் முன் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அதனால் திரையரங்க உடமைகளுக்கு சேதம் விளைவித்தனர். அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்றுத் திரையரங்குகளுக்கு, திரைப்படம் காண வரும் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது பாதுகாக்கும் ஒரே நோக்கோடு சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் ஓரிரு காட்சிகள் நீக்கப்பட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.