“உழைக்கும் வர்க்கத்தை பற்றிய படம் ‘வேலைக்காரன்”: சிவகார்த்திகேயன் பேட்டி!

வெற்றியும் நட்சத்திர அந்தஸ்தும்  சிலருக்கு இயல்பாகவே அமையும். சிலருக்கு கடும் உழைப்பின் மூலம் கிடைக்கும். அப்படியான உழைப்பு மூலம் தன்னை உயர்த்திக்கொண்டு வெற்றி பெற்றுவருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அசுர வளர்ச்சி அனைவரும் அறிந்ததே. அவரது ‘வேலைக்காரன்’ படம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில், ’24ஏஎம் ஸ்டுடியோஸ்’ ஆர்டி.ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிக்கெட் புக்கிங் அனைவரையும் வாய் பிளக்கச்  செய்துள்ளது. இதற்கு இயக்குனர் மோகன் ராஜாவின் வெற்றி பார்முலா , எல்லா வயது மக்களையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் இமேஜ், அருமையான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மற்றும் தயாரிப்பாளர் ஆர்டி.ராஜாவின் பங்களிப்பு  ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

‘வேலைக்காரன்’ குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ”அதிர்ஷ்டம் வாய்ப்புகள் தரலாம்; ஆனால் கடும் உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்பதை நம்புபவன் நான். ‘வேலைக்காரன்’ படம் எனக்கு கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம். மோகன் ராஜா சாரின் இந்த அற்புதமான கதையில் வெற்றி பெற கூடுதல் உழைப்பு போட்டுள்ளேன்.

கதை தான் ‘வேலைக்காரன்’ படத்தின் ஹீரோ. அந்த ஹீரோவுக்கு ஈடு கொடுக்க நான் உள்ளிட்ட எல்லா நடிகர்களும், அனைத்து  தொழில்நுட்ப கலைஞர்களும் உழைத்துள்ளோம். எந்த ஒரு சமுதாயத்துக்கும் இதய துடிப்பாக இருக்கும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றிய படம் இது. எல்லோரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த படம்.

இந்த படத்தின் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்ப கலைஞரும் தங்களது பெஸ்டுக்கும் மேல்  தந்துள்ளனர். இது போன்ற அணியுடன் பணிபுரிந்தது  எனது அதிர்ஷ்டம். தயாரிப்பாளர் ஆர்டி. ராஜா அவர்களின் ஆதரவு, ஊக்கம், கனவு மற்றும்   இயக்குனர் மோகன் ராஜா சாரின் கதை, எழுத்து மற்றும் அதை படமாக்கியுள்ள விதமே ‘வேலைக்காரன்’ படத்தை இவ்வளவு சிறப்பாகியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் ‘வேலைக்காரன்’ படத்தை ரசித்து, கொண்டாடி பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.