கமல்ஹாசன் – கௌதமி பிரிவுக்கு காரணம் ஸ்ருதிஹாசன்?

லிவ்விங் டுகெதராக 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனும், நடிகை கௌதமியும் பிரிந்ததற்கு காரணம், கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் தான் என்று திரையுலக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

கடந்த சில வருடங்களாகவே கௌதமிக்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையில் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் எந்தவொரு விஷயத்திலும் ஒத்துப்போக மாட்டார்களாம். இதனால் அவர்களுக்கு இடையில் எப்போதும் வாக்குவாதம் நடந்துகொண்டே இருக்குமாம்.

கமல்ஹாசன் அவ்வப்போது தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தார். எனினும், சமீபத்தில் ‘சபாஷ் நாயுடு’ பட விவகாரங்களில் கௌதமி – ஸ்ருதிஹாசன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டதாம்.

ஸ்ருதிஹாசன் முதன்முதலாக தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படம் ‘சபாஷ் நாயுடு’. இருவரும் தந்தை – மகளாகவே நடிக்கும் இப்படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்துக்காக ஸ்ருதிக்கு கௌதமி வடிவமைக்கும் ஆடைகள் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை என்றும், ஸ்ருதி தேர்வு செய்யும் ஆடைகள் கௌதமிக்கு பிடிக்கவில்லை என்றும் படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்தே இருவருக்கும் மோதல் இருந்து வந்ததாம்.

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது, இதே காரணத்துக்காக, படப்பிடிப்புத் தளத்திலேயே, அத்தனை பேரும் பார்த்துக்கொண்டிருக்க, கௌதமியும் ஸ்ருதிஹாசனும் காரசாரமாக சச்சரவில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் அன்று படப்பிடிப்பை நடத்த முடியாமல் ரத்து செய்துவிட்டார்களாம்.

அதன்பிறகு, கமல் பேசி சமாதானப்படுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஸ்ருதிஹாசன் வேண்டா வெறுப்பாக, “எனக்கும் கௌதமிக்கும் பிரச்சனை எதுவும் இல்லை” என்று தனது ஊடகத் தொடர்பாளர் மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதன்பிறகும் நிலைமை சீரடையவில்லை. பல்வேறு பிரச்சனைகளுக்காக அனுதினமும் வளர்ந்துகொண்டே வந்த மோதல், இன்று கமலை பிரியும் முடிவை எடுக்கும் நிலைக்கு கௌதமியை தள்ளிவிட்டிருக்கிறது என்கின்றன திரையுலக வட்டாரங்கள்.