சர்தார் 2 – விமர்சனம்

நடிப்பு: கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் மற்றும் சிலர்

கதை, கதாபாத்திரங்கள் & இயக்கம்: பி.எஸ்.மித்ரன்

கூடுதல் கதை: ரத்னகுமார், ஆஷாமீரா அய்யப்பன், விக்னேஷ் முனியாண்டி

திரைக்கதை: நம்பி

ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்

படத்தொகுப்பு: விஜய் வேலுகுட்டி

இசை: சாம் சிஎஸ்

கலை: எம்எஸ்பி மாதவன், பி.சேகர்

ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், சேத்தன் டி’சோஸா

தயாரிப்பு வடிவமைப்பு: ராஜீவன் நம்பியார்

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ் & ஐவி என்டர்டெயின்மென்ட்

தயாரிப்பாளர்கள்: எஸ்.லஷ்மன் குமார் & இஷான் சக்சேனா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் எஸ்2 மீடியா

நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் முதல் பாகம், ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரைத்துறையினரின் கவனம் ஈர்த்தது. ‘ஸ்பை திரில்லர்’ ஜானர் வகைப்பட்ட அப்படத்தின் வெற்றி தந்த ஊக்கம் காரணமாக, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகமான ‘சர்தார் 2’ தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

முதல் பாகத்தை அணுக்கழிவு மற்றும் குடிநீர் சந்தைப்படுத்தல் அரசியலை மையமாகக் கொண்டு சமூக விழிப்புணர்வு கதையாக அமைத்திருந்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்த இரண்டாம் பாகத்தின் கதையை 1980-களின் பின்னணியுடன் இணைத்து சர்வதேச உளவுத் தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

1980-ம் ஆண்டு ஜப்பான் தனது கொடூரமான எதிரி நாட்டுப் படைகளை அழிப்பதற்காக உருவாக்கிய அதிபயங்கர ‘டோகு’ என்ற பயோ – ஆயுதம் தற்செயலாக இந்தியாவுக்குள் கர்நாடகா – தமிழ்நாடு எல்லை கிராமம் ஒன்றின் மீது விழுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள். அந்த நோயிலிருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்காக, இந்திய உளவு அமைப்பான ‘ரா’வில் இருக்கும் சர்தார் சந்திரபோஸ் (கார்த்தி), ஜப்பானிடமிருந்து மாற்று மருந்தான ‘கோலிஸ்டின்’ என்ற மருந்தைப் பெற கடுமையாக முயன்றபோதிலும், அவர் தோல்வி அடைகிறார். இது அவரை பல ஆண்டுகளாக தீவிரமான குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது. அந்த ‘டோகு’ ஆயுதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க மூன்று ’ரா’ முகவர்கள் முன்வருகிறார்கள். அவர்கள் டோகுவை மறைத்து வைக்கிறார்கள். அதை அணுகுவதற்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட சாவியை மூன்று பாகங்களாகப் பிரித்து, ஆளுக்கொரு பாகத்தை வைத்துக் கொள்கிறார்கள்.

தற்காலத்தில், சில நொடிகளில் கோடிக்கணக்கான உயிர்களைப் பறிக்கக் கூடிய அந்த ‘டோகு’ என்ற பயோ – ஆயுதத்தைக் கைப்பற்றி, 140 கோடி இந்தியர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தத் திட்டம் தீட்டுகிறது யோகி என்ற ‘பிளாக் டேகர்’ (எஸ்.ஜே.சூர்யா) தலைமையிலான சர்வதேச கூலிப்படை. இதற்காக, ‘டோகு’வை அணுகுவதற்குப் பயன்படும் சாவியின் மூன்று பாகங்களைக் கைப்பற்றும் முயற்சியில் அது இறங்குகிறது.

முக்கியத்துவம் இல்லாத வழக்குகளைக் கையாளும் சாதாரண பிரிவில் முடக்கப்பட்டிருக்கும் சர்தாரின் மகனும் ‘ரா’ ஏஜெண்டுமான விஜய் பிரகாஷ் என்ற விஜி (இன்னொரு கார்த்தி), தனது அப்பா சர்தாருடன் இணைந்து, யோகி என்ற ’பிளாக் டேகரின்’ சர்வதேச கூலிப்படையின் சதியை முறியடிக்கிறாரா இல்லையா? என்பதே ‘சர்தார் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

அப்பா சர்தார் சந்திரபோஸ், மகன் விஜய் பிரகாஷ் என்ற விஜி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் – இரட்டை வேடங்களில் – நடித்திருக்கிறார் கார்த்தி. முதுமையான சர்தார், இளமையான விஜி என இருவேறு காலகட்டங்களில், இரு வேறு பரிமாணங்களில் தோன்றும் அவர், இவ்விரு கதாபாத்திரங்களின் வேறுபாட்டை நடிப்பில் காட்டி, தனது அசாத்திய நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் படத்தை தனி நபராகத் தாங்கிப் பிடித்திருக்கிறார். பாராட்டுகள் கார்த்தி!

சர்வதேச கூலிப்படைத் தலைவன் யோகி என்ற பிளாக் டேகராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். ஒரு நல்ல சமூகக் காரணத்துக்காக தவறான வழியில் போராடும் வித்தியாசமான, ஸ்டைலிஷான, ஆனால் மிகக் கொடூரமான வில்லனாக இதில் உருவெடுத்துள்ளார். தனது தனித்துவமான ‘டயலாக் டெலிவரி’யுடன் வில்லத்தனத்தில் மிரட்டி, ரசிக்க வைத்திருக்கிறார்.

ஏஜெண்ட் ஜாராவாக வரும் மாளவிகா மோகனன், ஜாராவின் மகள் ஃபைஸாவாக வரும் ஆஷிகா ரங்கநாத், இந்திராணியாக வரும் ரஜிஷா விஜயன், பாவாடைசாமியாக வரும் முனிஷ்காந்த், பொம்மையாக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி, ஏஜெண்ட் ஜாங்கோவாக வரும் யோகி பாபு, முகவர் நிழல் ரவியாக வரும் நிழல்கள் ரவி, ஏஜெண்ட் வால்ரஸாக வரும் அச்யுத் குமார், டாக்டர் சாமாக வரும் தேவதர்ஷினி உள்ளிட்ட ஏனைய அனைத்துக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

முதல் பாகத்தைப் போலவே ஒரு சமூகப் பிரச்னையை இந்த இரண்டாம் பாகத்தின் ஸ்பை த்ரில்லர் கதைக்குள் கொண்டுவர முயன்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இந்த முறை அவர் கையில் எடுத்திருப்பது ‘ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ்’. தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், அந்த மருந்துகளுக்கு எதிராக பாக்டீரியாக்கள் உருவாக்கிக்கொள்ளும் எதிர்ப்புத்தன்மை ஆகியவற்றை பற்றி இப்படத்தில் அவர் பேசியுள்ளார். ஆனால், முதல் பாகத்தில் கதையோடு இயல்பாகப் பயணித்த தகவல்கள், இங்கே பல இடங்களில் பாடம் எடுப்பதுபோல மாறுவதுடன், தேவைக்கு அதிகமாக அச்சத்தை விதைக்கும் தொனியிலும் சொல்லப்படுகின்றன. மேலும், தெளிவில்லாமல் குழப்பும் திரைக்கதையும், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தின் நீளமும் பார்வையாளர்களுக்கு அயற்சியையும், சோர்வையும் ஏற்படுத்துகின்றன. இக்குறைபாடுகளைக் களைந்திருந்தால் படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கும் நூறாவது படம் இது என்பதால், அவர் ரொம்பவே மெனக்கெட்டு, சிறப்பாக பின்னணி இசை அமைத்து பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறார்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்துக்கு உயர்த்தியுள்ளது.

‘சர்தார் 2’ – கார்த்தியின் நடிப்புக்காகவும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவும் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5