மண்டாடி – விமர்சனம்
நடிப்பு: சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பாலசரவணன், ஸ்டண்ட் சிவா, ராம்ஸ், பத்மன், ஆடுகளம் முருகதாஸ், கிருத்திகா பாலசுப்பிரமணியன், கிரிஷ் ஹாசன், ரேகா குமணன், அருண் குமார் எம் மற்றும் சிலர்
கதை, திரைக்கதை, இயக்கம்: மதிமாறன் புகழேந்தி
கூடுதல் திரைக்கதை: எல்ரெட் குமார், ஆர் மோகனவசந்தன், திரள் சங்கர்
வசனம்: அமீர் ஜமால் கான், மதிமாறன் புகழேந்தி
ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர் ஐஎஸ்சி
படத்தொகுப்பு: பிரதீப் ஈ ராகவ்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
தயாரிப்பு வடிவமைப்பு: டி ஆர் கிரண்
ஸ்டண்ட்: பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ
இணை தயாரிப்பாளர்: வி.மணிகண்டன்
தயாரிப்பு: ‘ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் (பி) லிட்’ எல்ரெட் குமார்
பத்திரிகை தொடர்பு: ரேகா
’மண்டாடி’ என்ற சொல்லுக்கான விளக்கம்: கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது அல்லது பாய்மரப் படகுப் போட்டியின்போது, முன்நின்று வழிநடத்தும் தலைவரை (அதாவது, கேப்டனை) ‘மண்டாடி’ என்பார்கள். குறிப்பாக, பாய்மரப் படகிலிருக்கும் மீனவர்களை அல்லது பாய்மரப் படகுப்போட்டி வீரர்களை, நீர்வழிப் பாதையில் சரியாக அழைத்துச் செல்லும் நெறிப்படுத்துபவரை இச்சொல் குறிக்கும். இந்த திரைப்படம் பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டது என்பதால், பொருத்தமாக இதற்கு ‘மண்டாடி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
தமிழ்த் திரையில் 1998ஆம் ஆண்டு முதல் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர்; 2009ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’பரோட்டா போட்டி’ என்ற நகைச்சுவைக் காட்சியில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்து‘பரோட்டா சூரி’ என்ற பெயரைப் பெற்றவர்; அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து, பார்வையாளர்களை சிரிக்க வைத்து, வெற்றிகரமான முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்தவர்; இந்நிலையில், 2023ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் காமெடி ரூட்டிலிருந்து விலகி, அனைத்துத் தரப்பினரும் பாராட்டக்கூடிய கதை நாயகனாக பரிணாமம் அடைந்தவர்; தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ போன்ற பேர் சொல்லும் படங்களில் நடித்து வளரும் ஹீரோவாக வலம் வருபவர்; தனது வித்தியாசமான கதைத் தேர்வால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருபவர். அவர் தான் நடிகர் சூரி. அவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில், பாய்மரப் படகுப் பந்தயத்திற்குப் புகழ்பெற்ற கடற்கரை கிராமமான முகவைப்பட்டினத்தில், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடப்பதாக கதை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில், பாய்மரப் படகுப் போட்டியையும், அதற்கான அணிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வாக்குமிக்க மனிதர் சாட்டப்புலி (சுஹாஸ்). அவர் தன்னை பாய்மரப் படகுப் போட்டியில் சேர்த்துக்கொள்ள மறுப்பதால் ஆத்திரம் அடையும் மாரி (மிதுன் ஜெய்சங்கர்) என்ற இளைஞர், அவர் மீதும், அவரது மகன் கிட்டான் (கிரிஷ் ஹாசன்) மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்துகிறார். ஆனால், ஊர்த் திருவிழாவில் ஏற்பட்ட அமளி காரணமாக இக்கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொள்ளும் சாட்டப்புலியும், கிட்டானும், பழி வாங்குவதற்காக தங்கள் ஆட்கள் மூலம் மாரியைத் தேடி அலைகிறார்கள். மாரி இவ்வூரில் இருந்தால் அவரை காப்பாற்ற முடியாது என்று பதறும் அவரது அப்பா (ரவீந்திர விஜய்), சென்னையிலுள்ள தனது நண்பர் முத்துக்காளியிடம் (சூரி) அடைக்கலம் புகுமாறு அறிவுறுத்துகிறார்.
அதன்படி மாரி சென்னை செல்கிறார். அங்கு தீம் பார்க் ஒன்றில் வேலை செய்யும் முத்துக்காளியை சந்திக்கிறார். மாரி தனது முன்னாள் காதலி ஏஞ்சல் ராக்கம்மாவின் (மகிமா நம்பியார்) மகன் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் முத்துக்காளி. ஆனால், அங்கேயும் சாட்டப்புலியின் ஆட்கள் மாரியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார் முத்துக்காளி. சொந்த ஊரில் பாய்மரப் படகுப் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு மண்டாடியாக – கேப்டனாக – பெரும் புகழுடன் திகழ்ந்த முத்துக்காளி, அப்போது நிகழ்ந்த சில கசப்பான சம்பவங்கள் காரணமாக ”படகுப் போட்டியே வேண்டாம்” என்று ஊரைவிட்டு வெளியேறி சென்னை வந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக சொந்த ஊர்ப்பக்கம் தலை வைத்துக்கூட படுக்காத முத்துக்காளி, இப்போது மாரி பிரச்சனையை சமரசம் பேசி முடித்து வைப்பதற்காக, மாரியை அழைத்துக்கொண்டு சொந்த ஊர் வருகிறார்.
அங்கு பஞ்சாயத்தார் முன்னிலையில் சமரசம் பேசும் முத்துக்காளி, ”மாரியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது” என்கிறார். உடனே சாட்டப்புலி, ”அப்படியென்றால் நம் இரண்டு வகையறாவுக்கும் பாய்மரப் படகு போட்டி வைத்துகொள்வோம், அதில் யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் இனிமேல் போட்டியில் இறங்கக் கூடாது. சம்மதமா?” என்று சவால் விடுகிறார். இந்த சவாலை முத்துக்காளி ஏற்றுக்கொள்கிறார்.
சமரசம் பேச வந்த முத்துக்காளி எப்படி ‘முகவை மைந்தன்ஸ் அணி’யைப் படகு போட்டிக்குத் தயார்ப்படுத்துகிறார்? அவரும் அவரது அணியினரும் சாட்டப்புலியின் ‘சுனாமி அணி’யை கடலுக்குள் தோற்கடித்தார்களா? முத்துக்காளிக்கும், ஏஞ்சல் ராக்கம்மாவுக்கும் இடையிலான பழைய காதல் கதை என்ன? அந்த காதல் முறிந்தது எப்படி? முத்துக்காளிக்கும் சாட்டப்புலிக்கும் என்ன பிரச்சனை? முத்துக்காளி தன்னைத் தானே சொந்த ஊரிலிருந்து 20 ஆண்டுகள் ஒதுக்கி வைத்துக்கொண்டது ஏன்? அவரது ஃபிளாஷ்பேக் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது ‘மண்டாடி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் முத்துக்காளியாக சூரி நடித்திருக்கிறார். உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்பார்களே… அப்படி கடலிலும் தரையிலும் மிகவும் சிரமப்பட்டு, கடினமாக உழைத்து, தனது நாயகக் கதாபாத்திரத்தை கம்பீரமாகவும் வெற்றிகரமாகவும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஏற்படுத்திய இறுக்கம், ‘முகவை மைந்தன்ஸ் அணி’க்காகத் தளராமல் தொடர்ந்து செய்யும் முயற்சிகள், குற்றவுணர்வினால் உண்டாகும் தடுமாற்றம், துரோகிகளைப் பழிவாங்க எழும் உக்கிர கோபம் என அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தி, நடிப்பில் அழுத்தமாகத் தடம் பதித்து, பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவர் இந்த படத்தில் போட்டிருக்கும் விலை மதிப்பற்ற உழைப்புக்கு அரசு விருதுகள் உட்பட பல வெற்றிக் கேடயங்கள் நிச்சயம் தேடி வரும். அத்துடன் ‘ஆக்ஷன் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? கூப்பிடு சூரியை’ என்று படவாய்ப்புகளும் வந்து குவியும். வாழ்த்துகள் சூரி!
வில்லன் சாட்டப்புலியாக நடித்திருக்கிறார் சுஹாஸ். தெலுங்கில் பிரபலமாகத் திகழும் இவருக்கு இது தமிழில் அறிமுகப் படம். முதலில் நாயகனின் நண்பனாக இருந்து, பின்னர் வில்லத்தனத்தில் மிரட்டி, பிரித்து மேய்ந்திருக்கிறார்.
கதையின் நாயகியாக, ஏஞ்சல் ராக்கம்மா என்ற முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார். கிராமத்துக் காதலியாக, துரோகம் கண்டு கொந்தளிக்கும் கோபக்காரியாக, உண்மை தெரிந்து உள்ளம் மாறும் பொறுப்புள்ள மனுஷியாக… என எமோஷனல் காட்சிகள் அனைத்திலும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியின் அப்பாவாகவும் மூத்த மண்டாடியாகவும் மச்சமுனி என்ற கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், நாயகியின் மகனாக, துடிப்பு மிக்க இளைஞனாக மாரி என்ற கதாபாத்திரத்தில் வரும் மிதுன் ஜெய்சங்கர், நாயகனின் நண்பனாகவும், நாயகியின் கணவனாகவும், மாரியின் அப்பாவாகவும் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ரவீந்திர விஜய், ஆங்காங்கே காமெடியைக் கொளுத்திப் போட்டு சிரிக்க வைக்கும் கத்தார் ரவி என்ற கதாபாத்திரத்தில் வரும் பாலசரவணன், நாயகனின் சகோதரி மகள் பாகம்பிரியாளாக வரும் கிருத்திகா பாலசுப்பிரமணியன், நாயகனின் சென்னை நண்பராக வரும் ஆடுகளம் முருகதாஸ், வில்லனின் அப்பா இடும்பையாவாக வரும் ஸ்டண்ட் சிவா, வில்லனின் மகன் கிட்டானாக வரும் கிரிஷ் ஹாசன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது யதார்த்தமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதியிருக்கிறார். கூடுதல் திரைக்கதையை தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ஆர் மோகனவசந்தன், திரள் சங்கர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். வசனத்தை அமீர் ஜமால் கான், இயக்குநர் மாறன் புகழேந்தி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்த எழுத்துக் கூட்டணி ஆழ்ந்து சிந்தித்து, ஒரு காட்சியையோ, ஒரு வசனத்தையோ தேவையின்றி சேர்த்து விடாமல், நீரோட்டம் போல் பட ஓட்டம் இருக்க வேண்டும் என்ற சிரத்தையுடன் இப்படைப்பை பேப்பரில் உருவாக்கியுள்ளது.
பேப்பரில் இருந்த இப்படைப்பை, பொருத்தமான நடிப்புக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களது திறமை வெளிப்படும் வகையில் அவர்களைப் பயன்படுத்தி, திரைப்படம் ஆக்கியுள்ளார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. இதுவரை திரையில் சொல்லப்படாத மீனவர்களின் வாழ்வியலை, பிரமிக்க வைக்கும் காட்சிமொழியில் மிக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். நாயகன் சூரியை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ’மாஸ் ஹீரோ’வாக காட்டியிருக்கிறார். அதே நேரத்தில் அவரை சுற்றி இயங்கும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்கள் மனதில் நிற்கும் வகையில் காட்சிகளை வடிவமைத்து சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட கவனத்தை ஈர்க்கும் வகையில் பயணிக்க வைத்திருக்கிறார். துரோகத்தால் பகைவர்களாகும் நண்பர்கள், கிராமத்துக் காதல் மற்றும் பிரிவு போன்றவை வழக்கமான கதையாக தெரிந்தாலும், அவற்றுக்கான காட்சியமைப்புகள் மற்றும் மீனவர்களின் வாழ்வியலை புதிய கோணத்தில் கையாண்டது மற்றும் பாய்மரப் படகுப் பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம், இது வழக்கமான படம் அல்ல என்பதை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர். பாராட்டுகள் மதிமாறன் புகழேந்தி!
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் பாய்மரப் படகு போட்டி, அதில் நடக்கும் விபத்து, வீரர்கள் லாவகமாக நிகழ்த்தும் சாகசங்கள் என நடுக்கடலில் நடக்கும் விஷயங்களை வெவ்வேறு கோணங்களில் படம் பிடித்துப் பிரமிப்பூட்டும் திரையனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு தந்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ், விறுவிறுப்பைத் தக்க வைக்கும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார். குறிப்பாக பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியைத் தொகுத்த விதம் பிரமாதம்.
விஜயகாந்த் ரசிகர் மன்ற பதாகைகள், ஃபைபர் படகுகள், மரப்படகுகள் எனக் கலை இயக்குநர் கிரண் தனது பணியைக் குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.
ஸ்டண்ட் இயக்குநர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், மகேஷ் மாத்யூ ஆகியோர் கடலிலும், தரையிலும் நடக்கும் சண்டைக் காட்சிகளை அபாரமாக வடிவமைத்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ‘மண்டாடி மண்டாடி’, ‘கைவளவி குலுங்க’, ‘ஒளிவட்டம்’ ஆகிய பாடல்கள் அருமை. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பின்படியும், பார்வையாளர்களுக்கு பரபரப்பைக் கூட்டும்படியும் திரைக்கதையில் ஓர் அங்கமாகவே பயணித்திருக்கிறது.
‘மண்டாடி’ – அனைத்துத் தரப்பினரும் பார்த்து ரசிக்கத் தக்க நல்ல பொழுதுபோக்குத் திரைப்படம்!
ரேட்டிங்: 4/5
