நடிகை பார்வதி நாயர் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் பணியாளர் கைது

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். ‘உத்தமவில்லன்’, ‘நிமிர்ந்து நில்’,’ சீதக்காதி’ உட்பட பல திரைப்படங்களில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.

இவர் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் திருடுபோனது தொடர்பாக வீட்டில் வேலை பார்த்துவந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது போலீஸில் புகார் தெரிவித்திருந்தார். அதேசமயம் ‘பார்வதி நாயர் இரவு நேரங்களில் ஆண் நண்பர்களுடன் மது விருந்து நடத்தியபோது, நான் பார்த்துவிட்டதால் என் மீது கோபம் ஏற்பட்டது. அதனால், என் மீது வீணாக பழிசுமத்துகிறார்’ என்று சுபாஷ் சந்திரபோஸ் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னை மிரட்டுவதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் இரு தினங்களுக்கு முன் அளித்த மற்றொரு புகாரைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீஸார், சுபாஷ் சந்திரபோஸை புதுக்கோட்டையில் கைது செய்து சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.