நிர்பயாவுக்கு ஒரு நீதி; பில்கிஸ் பானுவுக்கு வேறொரு நீதி!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா (ஜோதி சிங்) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்று அவர்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிருந்தா காரத் கூறுகையில், “கொள்கை அளவில் மரண தண்டனைக்கு எதிரானவள் நான். ஆனால் இது போன்ற கொடூரமான செயல்களுக்கு மரண தண்டனை தேவையானது. நம்முடைய நாட்டில் நீதித்துறையில் பாரபட்சமான நடைமுறை காணப்படுவதே நான் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஆகும். பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?” என கேள்வி எழுப்பி உள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கு 
குஜராத் மாநிலத்தில் 2002–ம் ஆண்டு நரேந்திர மோடியின் ஆசியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தின்போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட கும்பலால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது 2 வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தபோது, அதனை ஏற்காமல் அலட்சியமாக செயல்பட்ட 5 போலீசாரும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க தவறிய 2 டாக்டர்களும் கைதானார்கள்.
இந்த வழக்கு விசாரணை ஆமதாபாத் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, குற்றவாளிகள் சாட்சியங்களை அழிக்கக் கூடும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட பெண் மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது.
இதனிடையே, கைதானவர்களில் ஒருவர் விசாரணையின்போது, உயிர் இழந்தார். வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, 12 பேரை (இறந்தவர் உள்பட) குற்றவாளிகள் என்று அறிவித்ததுடன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், போலீசார், டாக்டர்கள் உள்பட 7 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய கோரி, குற்றவாளிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களில் 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி சி.பி.ஐ. தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 7 பேரை விடுதலை செய்ததற்கும் சி.பி.ஐ. ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேலும் போலீசார், டாக்டர்கள் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையையும் ரத்து செய்ததுடன், அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நிர்பயா வழக்கில் அனைத்து குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சி.பி.ஐ மரண தண்டனை கோரியும். ஒரு குற்றவாளிக்குக் கூட மரண தண்டனை விதிக்கவில்லை என்பதை தான்.
அதனால் தான் பிருந்தா காரத், “நம்முடைய நாட்டில் நீதித்துறையில் பாரபட்சமான நடைமுறை காணப்படுவதே நான் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணம் ஆகும். பில்கிஸ் பானு வழக்கில் நடந்தது என்ன?” என கேள்வி எழுப்பி உள்ளார்.