நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் போராட்டம்!

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை உடனே வாபஸ் பெற கோரியும் நெடுவாசல் கிராமத்தில் ஒரு வார காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று  சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் இப்போராட்டத்தை முன்னெடுத்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, “மத்திய அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டின்  மீது அழிவுத் திட்டங்களைத் திணித்து வருகிறது. தமிழக இறையான்மையை மத்திய அரசு மதிக்கவில்லை. தமிழகத்தில் உறுதியான தலைமை இல்லாத சூழலை பயன்படுத்தி, மத்திய அரசிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.