”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”: புதிய முதல்வர் பதவி ஏற்றார்

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக அமைச்சரவை இன்று (மே 7ஆம் தேதி) காலை 9 மணியளவில் பதவி ஏற்றுக்கொண்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய முதலமைச்சராகவும், அவரைத் தொடர்ந்து திமுக. எம்.எல்.ஏ.க்கள் 33 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

0a1aமு.க.ஸ்டாலின் பதவி பிரமாணம் வாசிக்கும்போது தனது பெயரை “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார். அதை கேட்டு கூடியிருந்தோர் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் கண் கலங்கினார்கள்.

கொரோனா கொடுந்தொற்று காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அவைத் தலைவரான தனபால், அவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், பாஜகவை சேர்ந்த இல.கணேசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

முன்னதாக, விழா அரங்கத்திற்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதவி ஏற்க உள்ள புதிய அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் சபரீசன், பேரக் குழந்தைகளை ஸ்டாலின் ஆளுநருக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் சில நொடிகள் பேசிய ஆளுநர். பேரக் குழந்தைகளை அருகில் அழைத்துக் கொஞ்சினார். பின்னர் அனைவரும் மேடைக்குச் சென்றனர்.

அதன்பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்டாலினுக்கும், ஏனைய புதிய அமைச்சர்களுக்கும் ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார்.